
கன்னித் தன்மை பரிசோதனை பெண்களை இழிவுபடுத்துவதோடு உடலியல் கோட்பாட்டில் சிறுமைப்படுத்தலாகவே நோக்க வேண்டியுள்ளது. மனித படைப்பில் ஏற்படுத்தப்பட்ட சில சம்பிரதாயங்கள் பெண்களுக்கு மட்டும் தான் என்ற நிலையில் மனிதன் மிருகங்களை விட கேவலமானவனாக கருதப்படுகிறான். இச் செயற்பாட்டில் பெண்களே முதன்மை வகிப்பதை நோக்குகையில் பெண்களின் உரிமைகளை தாங்களே குழித்தோண்டி புதைப்பதற்கு சமனாகின்றது. இது பெண்களின் இயல்பான செயற்பாட்டுக்கு செயற்கை அர்த்தம் கற்பிக்கப்படுகிறது. இருபதாம் நூற்றாண்டிலும் இவ்வாறான மூட நம்பிக்ைககள் நடந்து கொண்டிருக்கின்றது என்பது வேதனைக்குரியதே.
தென்னாசியாவில் கன்னித்தன்மையை பரிசோதிக்கும் ஒரே நாடாக இலங்கை திகழ்கிறது. இந்த விபரங்களை பல தடவைகள் டொக்டர் சிரியாணி பஸ்நாயக்க போன்றோர் பகிரங்கமாக வெளியிட்டு வந்திருக்கிறார்கள். அவர் பத்து வருடங்களுக்கு முன்னர் இலங்கையில் இன்னமும் சிங்கள சமூகத்தில் தொடரும் கன்னிப் பரிசோதனை பற்றிய உண்மைகளை தனது ஆய்வுக் கட்டுரையொன்றின் (Basnayake, Sriani. “Virginity – The Facts: The Hymen & Virginity” Lankalibrary Forum. 2007) மூலம் வெளிக்கொணர்ந்தார்.
வியப்பூட்டும் தகவல்
“தென்னாசியாவிலேயே இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ், நேபாள், மாலைதீவு, பூட்டான் எங்குமே இல்லாத கன்னித்தன்மையைப் பரிசோதிக்கும் முறை இலங்கையில் மாத்திரம் தான் நிலவுகிறது. ஆய்வொன்றின்படி ஒரு பெண் முதலாவது தடவையாக பாலுறவு புரியும்போதுதான் பெண்ணுறுப்பு வழியாக இரத்தம் வெளியேறுவதாக இலங்கையில் 85 சதவீதமானவர்கள் நம்புவதாக தெரிவிக்கின்றது. ஆனால் 20---25 சதவீதமான பெண்களுக்கு முதலாவது தடவையாக பாலுறவு புரியும் போது இரத்தம் வெளியேறுவதில்லை என்பது விஞ்ஞான ரீதியாக உறுதிசெய்யப்பட்ட ஒன்று.”
டொக்டர் சிறியாணி பஸ்நாயக்க குறிப்பிடுகையில் தம்மிடம் வரும் பெண்களில் கணிசமானவர்கள், தான் கன்னித்தன்மையை இழக்கவில்லை என்று உறுதிச்சான்றிதழ் தரும்படி வேண்டி வருகின்றனர், பெரும்பாலும் கொழும்பின் இருதயமாக இருக்கிற பகுதியிலிருந்து கூட இந்த உறுதிச்சான்றிதழ் கோரி அதிகளவினர் வருவதாகவும் குறிப்பிடுகிறார், மேலும் அவர் இப்படிக் குறிப்பிடுகிறார்.
”சமீபத்தில் தயயொருவர் தனது 3 வயதேயுடைய சிறிய குழந்தையை கன்னித்தன்மைக்கான சான்றிதழ் தரும்படி அழைத்து வந்தார். அக்குழந்தைக்கு பாலுறுப்பில் ஏற்பட்ட காயமொன்றின் காரணமாக எதிர்காலத்தில் கன்னித்தன்மையை சந்தேகிக்கும் ஒன்றாக மாறிவிடக்கூடாது என்பதற்காக அது காயப்பட்டதனால் ஏற்பட்டது என்று சான்றிதழ் தரும்படி கோரி அந்தத் தாய் வந்திருந்தார். மிகவும் படித்த விடயமறிந்தவர்கள் கூட இப்படி செய்வது ஆச்சரியத்தைத் தருகிறது. சமீபத்தில் ஒரு பேராசிரியர் ஒருவர் கூட தனது மகளுக்கு கன்னித்தன்மையை உறுதி செய்யும் சான்றிதழ் வேண்டி வந்திருந்தார்.” என்கிறார் அவர்.
பெண்களின் மறு உற்பத்தி சுகாதாரம் பற்றிய தமது ஆய்வின்போது 32% வீதமானோர் கற்பு பற்றிய சரியான விளக்கத்தைக் கொண்டிருக்கவில்லை. நகர்ப்புற இளைஞர்களில் 44.2% வீதத்தினரும் கிராமப்புற இளைஞர்களில் 47.4% வீதமானோரும் “கன்னி கழியாதவர்களுக்கு” முதல் பாலுறவின் போது இரத்தம் வெளியேறும் என்று நம்பிக்கொண்டிருகின்றனர் என்கிறார் சிரியாணி.
முதல் பாலுறவின் போது கன்னித்திரை கிழிந்து இரத்தம் கசிந்தாக வேண்டும் என்கிற ஐதீகம் குறிப்பாக பல ஆண்களிடம் நிலவவே செய்கிறது. பெண்ணுக்கான கற்பின் அடையாளமாக கன்னித்திரை கிழிதலை கருதி வருவது குறித்து சிறியாணி குறிப்பிடுகையில், மருத்துவ விளக்கங்களின் படி கன்னித்திரை கிழியாமலும் கூட ஒரு பெண் கற்பந்தரிக்க முடியும் என்கிறார்.
இது சிங்கள சமூகத்தில் ஆரம்பத்திலிருந்து இருக்கவில்லை என்றும் இது ஐரோப்பியரிடம் குறிப்பாக யூத பாரம்பரியத்தில் இருந்ததென்றும், காலனித்துவ காலத்தில் கத்தோலிக்க மதத்தின் செல்வாக்கோடு இதுவும் கூடவே இலங்கை சிங்கள மக்களிடம் ஊன்றிவிட்டதென்றும் வாதம் வைக்கின்றனர்.
யூத மரபில் இருந்ததற்கு ஆதாரமாக பி.ஏ. ஆரியதிலக்க என்பவர் பைபிள் வாசகங்களையும் ஆதாரம் காட்டுகிறார். சாராம்சத்தில் இவ்வாதங்கள் சிங்கள இனத்தின் பெருமிதத்தை வலியுறுத்துவதாகவும், அது கறைபடியாத அப்பழுக்கில்லாத ”புனிதமான” மரபைக் கொண்டதென்கிற வாதத்தை அடிப்படையாக மட்டுமே இருந்தது.
இது எந்த இனக்குழுமத்திடமிருந்து தொற்றிக்கொண்டதாக இருந்த போதும், இன்றும் சமூக வழக்கிலிருக்கும் ஒரு பாரதூரமான கொடுமை. இன்று கற்பொழுக்கம் பற்றிய புனைவுகள், ஐதீகங்கள் என்பவற்றை விளங்கிக்கொள்வது, அதனை நீக்குவது என்பனவற்றை இலக்காகக் கொண்ட ஆரோக்கியமான உரையாடலை மேற்கொள்வது என்பது இன்னமும் வரட்சி நிலையில் தான் இருக்கிறது.
திருமண முதலிரவின் போது திருமணக் கட்டிலில் விரிப்பதற்காக வெள்ளை விரிப்பொன்று மணமக்களுக்கு வழங்கப்படும். முதல் பாலுறவின் போது மணப்பெண்ணிடமிருந்து சிறிதளவு இரத்தம் கசிந்து இந்த வெள்ளை விரிப்பில் காணப்படுவதன் மூலம் அவள் கன்னி என நிரூபிக்க அதுவே மிகச் சரியான சான்றென கருதப்படும்.
மணமகன் கன்னித்தன்மையை எதிர்பார்க்கிறானோ இல்லையோ, தமது மகள் கன்னித்தன்மையைக் கொண்டவள் என்று பெண்வீட்டாரும், தனது மகன் கன்னித்தன்மையுள்ள பெண்ணைத்தான் திருமணம் முடித்தார் என்பதை மாப்பிள்ளை வீட்டாரும் பெருமிதம்கொள்ளும் சடங்காகவும் இது இருக்கிறது. இந்தச் சடங்கை செய்யாவிட்டால் சமூகத்தில் கௌரவத்திற்கு இழுக்கு நேரிடும் என்று பயம்கொள்வதையும் காணமுடிகிறது.
கன்னிப்பரிசோதனை சடங்கு
கன்னிப்பரிசோதனை மேற்கொள்ளும் சடங்கை “இச திய மங்கல்ய” என்று அழைப்பார்கள். ஆனால் அந்த சடங்கின் உண்மையான பொருள் “தலையில் நீர் வார்த்தல்” என்று கூறலாம். சில பிரதேசங்களில் “இச திய பலன்ட யாம” என்றும் கூறுவார்கள். அதாவது “தலையில் நீர் பார்த்தல்” என்று தமிழில் அதனை மொழியாக்கம் செய்யலாம். சம்பிரதாய பூர்வமான குடும்பங்களில் வெள்ளைத்துணியை பரிசோதித்துப் பார்க்கும் நிகழ்ச்சி திருமணத்திற்கு அடுத்த நாள் நடக்கும். “றெதி நெந்தா” சென்று அந்த விரிப்பை பார்வையிடுவார் அல்லது மணமகனின் தாயாரோ, மூத்த பெண்ணொருவரோ கூட அதனைச் சென்று பார்வையிடமுடியும். இறுதியும் உறுதியுமான முடிவைத் தெரிவிக்க விபரங்களுடன் முடிவு கூறுவதற்காக, திருமணத் தம்பதியரின் உறவினப் பெண்களுடன் “றெதி நெந்தா” அழைத்துச் செல்லப்படுவார். சில சந்தர்ப்பங்களில் இரண்டாம் பயணம் எனப்படும் “தெவனி கமன” வின் போது (அதாவது தேனிலவு கழிப்பதை முதல் நாளும் வெள்ளைத்துணி பார்ப்பது மறுநாளைக்கு மாற்றப்படும்.) அந்த வெள்ளைத்துணியை இதற்குரிய சம்பிரதாயங்கள் பின்வருமாறு மெற்கொள்ளப்படும்.
*மணமகள் இரண்டாம் பயணத்திற்கு சிவப்பு ஆடையால் அலங்கரிக்கப்படுவாள்.
*மணமகனின் தாயார் சிவப்பு மலர்ச் செண்டு கொடுத்து மணமகளை வரவேற்பார்.
*மணமகனின் குடும்பத்தினர், மணப் பெண்ணின் பெற்றோருக்கு சிவப்பு பூக்கொத்தை அனுப்பி வைப்பார். மணப்பெண், மணமகள் வீட்டுக்கு வரும்போது றபான் அடித்து பட்டாசு கொளுத்தப்படும். மணமகனின் தயார், விசேட பரிசுகளைக் கொடுத்து மணப்பெண்ணை வரவேற்பாள்.
*“றபான்’ தாளம் இசைக்கப்படாவிட்டால் அந்தப் பெண் “கற்பற்றவள்’ என்கிற செய்தியை ஊர் வாசிகளும் அங்கு கூடியிருப்பவர்களும் அறிந்துகொள்வார்கள்.
குறிப்பிட்ட அந்த வெள்ளைத்துணியை “கிரிகடஹெலய” என்று அழைப்பார்கள். அந்த வெள்ளை விரிப்பில் இரத்தக்கறை காணப்படாவிடில், அதாவது மணப்பெண் பரீட்சையில் தோல்வியடைந்தவளென்றால், அந்த அப்பாவிப்பெண் பகிரங்கமாகவே அவமதிப்புக்குள்ளாவாள். அத்தகைய தருணத்தில் மணப்பெண் நடாத்தப்படும் விதமானது இரண்டாம் பயணத்திற்கு அளிக்கப்படும் முக்கியத்துவத்திலும், குறிப்பிட்ட குடும்பங்களினதும் பிரதேசங்களினதும் சம்பிரதாயங்களைப் பொறுத்தும் வேறுபடும். இரண்டாம் பயணத்தின்போது “பரீட்சையில் தேறாத” மணப்பெண் தொடர்பாக கடைபிடிக்கப்படும் சம்பிரதாயங்கள் சில..
*இரண்டாம் பயணத்திற்கு ஆடம்பரமற்ற வெள்ளைச் சேலை உடுத்தும்படி மணப்பெண்ணை வற்புறுத்துதல்.மணமகனின் தாயார் வெள்ளை மலர்களுடன் மணமகளை எதிர்கொள்வாள். வரவேற்காமல் மணமகனின் தந்தை அல்லது யாரும் ஒரு ஆணைக்கொண்டு மணமகளை வரவேற்பது.
*சுவரில் மாட்டியிருக்கும் படங்களை மறுபக்கமாகத் திருப்பித் தொங்கவிடல்.
*மணமகனின் உறவினர் மணப்பெண்ணின் உறவினர்களை உபசரிக்க மாட்டார்கள். அவர்களை அவமதிக்கும் விதமாக திருமண அலங்கார மேசையைத் தவிர்த்து ஓரமாகப் போடப்பட்டிருக்கும் மேசையில் உணவருந்தும்படி அவர்களுக்குத் தெரிவிப்பது.
*உபசரிப்பதற்கு முன் கொண்டைப் பலகாரங்களின் கொண்டையை உடைத்து விடுவது.
*அனைத்து விருந்தினர்களின் முன்நிலையிலும் மணமகனின் தாயார் ஐசிங் சீனியினால் செய்யப்பட்ட வெள்ளை றோசாப்பூவொன்றை கேக்கிள் வைப்பாள்.
*வாழைப்பழத்தை அடியியிலிருந்து தோலுரித்தல்.
*விருந்தினர்கள் முன்னிலையில் மணமகன் குடும்பத்தார் தமது அதிருப்தியை தெரிவிக்கும் விதமாக சிறு சொற்பொழிவை நடாத்துதல். (இது மிக அரிதாகவே நடக்கும்.)
“தூய்மை”யான மணப்பெண் கிடைக்காததையிட்டு தமது வருத்தத்தைத் தெரிவிக்கும் சொற்பொழிவை ஆற்றிவிட்டு அவர்களை வரவேற்பதும் நிகழும். மணப்பெண் “கன்னி” இல்லை என்று கூறி மீளவும் மணப்பெண்ணின் பெற்றோரிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சிகளும் இதன் போது நிகழ்ந்துள்ளன. இந்த சம்பிரதாயங்களை மேற்கொள்ளாத இடங்களில் கூட முதலிரவின் போது இரத்தம் வெளியேறாவிட்டால் கடந்தகால ஒழுக்கத்தை சந்தேகித்து மனைவியின் மீது வன்மம்கொள்ளும் நிலைமையும் இருந்திருக்கிறது.
“கன்னி” என வழக்கில் உள்ள அர்த்தப்படுத்தப்பட்டுள்ள கருத்து:- திருமணமாகாத இளம்பெண், கன்னிகழியாத பெண், திருமணம் செய்து கொள்ளாமல் வாழ்பவள் போன்றன. ஆனால் இதை விட இன்னொன்றும் மேற்படி நிலைமைகளின்படி தோற்றுவிக்கப்பட்டிருக்கிறது. அது தான் “முதலாவது பாலுறவின் போது இரத்தம் வெளியேறும் பெண்ணே கன்னித்தன்மையுடையவள்” என்பது.
எனவேதான் திருமணத்திற்கு முன் இளம் பெண்கள் மத்தியில் கன்னித்தன்மை பரிசோதனையில் தாம் தோற்றுவிடுவோமோ என்கிற அச்சமும், பீதியுமாக கடும் உளச்சிக்கலுக்கு ஆட்பட்டு வாழ நேரிட்டுள்ளது. குறிப்பாக கன்னிச்சவ்வு பாதிப்பு ஏற்பட்டிருக்கலாம் என்கிற அவர்களின் அச்சம் அப்பெண்களுக்கு தொற்றிகொண்டிருக்கும். இது விளையாட்டின் போது அல்லது சைக்கிள் ஓட்டும் போது, கடினமான வேலைகளின் போது, அல்லது ஏதாவது ஒரு வழியில் ஏற்பட்ட காயங்களின் விளைவாக இது ஏற்பட வாய்ப்புண்டு. இப்படியான சந்தர்ப்பங்களால் தான் சம்பந்தப்பட்ட பெண்ணோ அல்லது பெற்றோர்களோ இது இன்ன காரணத்தினால் ஏற்பட்டது எனும் மருத்துவ சான்றிதழைப் பெற முனைகிறார்கள்.
இலங்கையில் நிலவும் பல்வேறு கொடிய பிரச்சினைகளுக்கு முன்னாள் இத்தகைய மோசமான சம்பிரதாயங்களும் நடைமுறையில் நிலவத்தானே செய்கிறது. புனிதம், தூய்மை, தீட்டு, துடக்கு போன்ற ஐதீகங்களும், மூடநம்பிக்கைகளும் புனைவுகளாக ஆக்கி அவற்றுக்கு நிறுவன வடிவம் கொடுத்து அதன் தொடர்ச்சியைப் பேணுவதில் வெற்றி கண்டு வந்துள்ள ஆணாதிக்க சமூக அமைப்பை வெறும் வர்க்க சமூக அமைப்பால் தலைகீழாக புரட்டிவிட முடியாது. அதற்கு போதிய சித்தாந்த பலம்பொருந்திய பண்பாட்டுப் புரட்சியும் அவசியமானது.
"ஆய்வுகளின்படி 76 வீதமான ஆண்கள் கன்னிப் பெண்களையே திருமணம் செய்து கொள்ள விரும்புகிறார்கள். திருமணத்தின் போது இந்த அத்தனை ஆண்களுக்கும் கன்னிப்பரிசோதனை நடாத்தப்பட்டால் எத்தனை பேர் சித்தியடைவார்கள்?”
நன்றி: - நமது மலையகம்