
- கொழும்பு பங்குப் பரிவர்த்தனையின் பிரதம நிறைவேற்று அதிகாரி ரஜீவ பண்டாரநாயக்க
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் எண்ணக் கருவின் அடிப்படையில் நாடளாவிய ரீதியில் 100 பாடசாலைகளில் நிறுவப்பட்டுள்ள மூலதன சந்தை சங்கங்கள், எதிர்காலத்துக்கான முதலீடாகுமென கொழும்பு பங்கு பரிவர்த்தனையின் பிரதம நிறைவேற்று அதிகாரி ரஜீவ பண்டாரநாயக்க தெரிவித்தார்.
நிதி தொடர்பான கல்வியறிவை மேம்படுத்துவதற்கு மிகவும் பொருத்தமான நபர்கள், மாணவர் சந்ததியே எனவும் பாடசாலைகள் ஊடாக இத்திட்டத்தை ஆரம்பிக்கும் ஜனாதிபதியின் இத்தீர்மானம் காலத்திற்குப் பொருத்தமான முடிவு எனவும் அவர் குறிப்பிட்டார்.
அண்மையில் ஜனாதிபதி ஊடகப் பிரிவினால் தயாரிக்கப்பட்ட ‘1O1 கதா’ நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே, கொழும்பு பங்குப் பரிவர்த்தனையின் பிரதம நிறைவேற்று அதிகாரி ரஜீவ பண்டாரநாயக்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.
மேலும் கருத்து தெரிவித்த ரஜீவ பண்டாரநாயக்க,
‘மூலதனச் சந்தை சங்கங்கள்’ மூலம் பங்குச் சந்தை தொடர்பில் முறையான தெளிவை மாணவர்களுக்கு வழங்க எதிர்பார்க்கிறோம். இத்திட்டத்தின் முதற்கட்டமாக உயர்தரப் பெறுபேறுகளின்படி வர்த்தகத் துறையில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற 100 பாடசாலைகள் தெரிவு செய்யப்ப டும். அவற்றில் நூறு மூலதனச் சந்தைச் சங்கங்கள் நிறுவப்படவுள்ளன. இதன் மூலம் மாணவர்களுக்கு மூலதனச் சந்தை பற்றிய விரிவான புரிதல் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் மாணவர்கள் பரந்த அறிவைப் பெறுவதோடு, நடைமுறை அறிவையும் பெறுவதற்கான வாய்ப்புக் கிடைக்கிறது.
வங்கித் துறை பற்றிய அறிவு பாடசாலைகளில் கொடுக்கப்பட்டாலும், மூலதனச் சந்தை பற்றிய அறிவை அளிக்கும் நிலை குறைவாகவே உள்ளது. நிதி அறிவும் குறைவாக உள்ளது. எனவே, அதையும் தாண்டி வணிக ரீதியில் மட்டுப்படுத்தப்பட்ட அறிவை விரிவுபடுத்துவது, அதாவது கலை, அறிவியல், கணிதம் போன்ற எந்தத் துறை மாணவர்களுக்கும் மூலதனச் சந்தை பற்றிய ஓரளவு அறிவை இச்சங்கங்கள் மூலம் வழங்குவதற்கு எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் குழந்தைகளிடம் நிதியியல் படிப்பில் புதிய பரிமாணத்தை உருவாக்க எண்ணுகிறோம்
இங்கு செயலமர்வுகள் மற்றும் கருத்தரங்குகளுக்கு மேலதிகமாக நடைமுறை அறிவை வழங்க முயற்சிக்கிறோம். தற்போதைய தலைமுறை மாணவர்களின் மூலதனச் சந்தை பற்றிய அறிவையும் புரிதலையும் மேம்படுத்தும் நோக்கத்துடன் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. அதன்படி, இது அவர்களை சமூகத்துடன் இணைவதற்காக தயார்படுத்தப்படுகிறது. குறிப்பாக, அவர்கள் சுயமாக தொழில்முனைவோராக மாறவும், தங்களையும், நாட்டையும் திறம்பட மேம்படுத்துவதில் ஈடுபட ஊக்குவிக்கப்படுகிறார்கள்.