![](https://archives1.vaaramanjari.lk/sites/default/files/styles/large/public/news/2019/10/27/Balochistan.jpg?itok=ZYT2pKkP)
இலங்கையில் தற்போது தேர்தல் மேடைகளில் அதிகமாக பொருளாதார அபிவிருத்தி மற்றும் ஜனநாயகம் தொடர்பாக பேசப்படுவதனால், இவை இரண்டிற்கும் இடையிலான தொடர்பு குறித்து இக்கட்டுரை ஆராய முற்படுகின்றது.
பொருளாதார அபிவிருத்திக்கு ஜனநாயகத்தின் அவசியம் மற்றும் அதன் முக்கியத்துவம் தொடர்பாக 1990களில் இருந்து அதிகம் வாதிடப்பட்டு வருகின்றது. அபிவிருத்தி என்பது ஜனநாயக சட்டகத்தில் இருந்து விடுபட்டு சுயாதீனமாக இடம்பெற வேண்டுமா அல்லது ஜனநாயகம் அபிவிருத்திக்கு அவசியமா? ஜனநாயகம் இல்லாத ஒரு சூழ்நிலையில் அபிவிருத்தி இடம்பெறுமா? ஜனநாயகம் அபிவிருத்தியை ஊக்குவிக்குமா என்பன இத்தலைப்பு தொடர்பாக பேசுகின்றபொழுது எழுப்பப்படும் பிரதான கேள்விகளாகக் காணப்படுகின்றன.
ஒரு நாட்டில் ஜனநாயக முறையொன்று காணப்படுவதானது தேர்தலில் வாக்களித்தல், பொருளாதார அபிவிருத்தி, ஐக்கியம் ஆகிய எல்லாவற்றையும் விட மேலான ஒன்று என ஜனநாயகம் தொடர்பாக ஆய்வுகளை மேற்கொள்ளும் புலமையாளர்கள் வாதிடுகின்றார்கள்.
இதைவிட, ஜனநாயகம் தொடர்பாக இன்று உலகில் பிறிதொரு வாதமும் இடம்பெற்று வருகின்றது. அதாவது, ஜனநாயகம் அபிவிருத்தியை தூண்டுமா அல்லது அபிவிருத்தி ஜனநாயகத்தை நிலைநாட்டுமா என்பதாகும். உலக வங்கியின் புகழ்பெற்ற ஆய்வாளரான டேனியல் கெளப்மன் (Daniel Kaufman) போன்றோர் இவ்வாதத்தை முன்வைக்கிறார்கள். உலகில் சில நாடுகள் ஆரம்பத்தில் ஜனநாயக மரபுகளை புறந்தள்ளி பிரஜைகளின் தனிமனித உரிமைகளையும் சுதந்திரத்தையும் ஒரு குறிப்பிட்ட காலம் கட்டுப்படுத்தி அதன் மூலம் அபிவிருத்தியை தழுவிக்கொண்டுள்ளன. இதற்காக மக்களும் தமது உரிமைகளையும் சுதந்திரத்தையும் தியாகம் செய்தனர்.
இதற்கு சிங்கப்பூர், தென்கொரியா, மலேசியா, ஹொங்கொங், பொஸ்வானா போன்ற பல நாடுகளை உதாரணமாக கூறலாம். மறுபுறம் ஜனநாயக மரபுகளை நீண்ட காலமாக பின்பற்றிவரும் இந்தியா, தென்னாபிரிக்கா, மெக்சிகோ, பிலிபைன்ஸ் போன்ற பல நாடுகள் இன்னும் அபிவிருத்தியடையவில்லை. உதாரணமாக, சிங்கப்பூர் மற்றும் கரிபியன் தீவில் அமைந்துள்ள ஜமெய்க்காவும் 1960களில் சுதந்திரம் பெற்ற நாடுகள்- ஜமெய்க்கா பல இயற்கை வளங்களைக் கொண்ட அபிவிருத்திக்கான பொருளாதார வாய்ப்புக்களைக் கொண்ட நாடாக காணப்பட்டது. ஆயினும், வளங்கள் அற்ற நாடாக காணப்பட்ட சிங்கப்பூர் இன்று எண்ணிப்பார்க்க முடியாத அளவிற்கு முன்னேற்றம் கண்டுள்ளது. இதில் ஜமெய்க்கா ஜனநாயக மரபுகளுக்கு அதிகம் முன்னுரிமை வழங்கியது. ஊடக சுதந்திரம் மிக அதிகளவில் மதிக்கப்படும் நாடு. ஆனால் சிங்கப்பூர் ஜனநாயக உரிமைகளைக் கட்டுப்படுத்தி அபிவிருத்திக்கு முன்னுரிமை வழங்கியது. இதற்கு லீ குவான்யூவின் தீர்க்கதரிசனக் கொள்கைகள், சிந்தனைகள், வழிகாட்டல்கள், அர்ப்பணிப்பு மற்றும் தலைமைத்துவம் போன்ற பல காரணிகள் செல்வாக்கு செலுத்தின.
இவ்வாறு அபிவிருத்தி மற்றும் ஜனநாயகம் தொடர்பாக மாறுப்பட்ட வாதங்கள் காணப்படுகின்றன. எவ்வாறாயினும், இலங்கை போன்ற பன்மைத்தன்மை கொண்ட நாடுகளுக்கு, நீண்ட போர், சமூகப் பிளவுகள் ஆழமாக காணப்படுகின்றன. இன மேலாதிக்கம் காணப்படுகின்ற நாடுகளில் ஜனநாயக வழிமுறைகளுடன் கூடிய அபிவிருத்தி குறித்து சிந்திக்க வேண்டியுள்ளது. ஜனநாயகத்தை கட்டுப்படுத்தி அபிவிருத்தியை தழுவிக்கொண்ட நாடுகளின் சமூகப் பொருளாதார, அரசியல் கலாசார சூழ்நிலைகள் இலங்கையின் சூழலிலிருந்து வேறுபட்டதாகும்.
ஆகவே, இங்கு மேற்கு ஐரோப்பிய நாடுகளில் கடைப்பிடிக்கப்படுகின்ற குறிப்பாக, ஸ்கன்டிநேவிய நாடுகளில் (நோர்வே, சுவீடன், டென்மார்க்) பின்பற்றப்படும் சமூக ஜனநாயக தத்துவங்களூடாக அபிவிருத்தி, சமத்துவம், சமூக நீதி, ஐக்கியம் தொடர்பாக சிந்திக்க வேண்டும். இந்த மாதிரியினை உலக வங்கி உட்பட பல சர்வதேச நிதி மற்றும் நன்கொடை நிறுவனங்கள் அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளில் ஊக்குவிக்கின்றன. இங்கு அபிவிருத்தி செயன்முறையின் போது உரிமைகள், பல்லினத்தன்மை, ஐக்கியம், சிறுபான்மையினரின் நலன்கள், சுற்றாடல் பாதுகாப்பு, பங்கேற்பு, கலாசார உரிமைகள், இயற்கை வளங்களின் பயன்பாடு என்பன பெரிதும் கவனத்தில் கொள்ளப்படுகின்ற விடயங்களாக காணப்படுகின்றன.
இதற்கு உதாரணமாக நோர்வே, சுவீடன், பின்லாந்து, டென்மார்க் ஆகிய நாடுகளைக் குறிப்பிடலாம். அமெரிக்காவை தளமாகக் கொண்டு இயங்கும் Freedom House நிறுவனம் உலக நாடுகளில் ஜனநாயகத்தின் நிலையை ஒவ்வொரு ஆண்டும் ஆய்வு செய்து வருகின்றது. சுமார் 167 நாடுகள் இந்த ஆய்வுக்கு உட்படுத்தப்படுகின்றன. அந்தவகையில், இவ்வமைப்பின் 2018ம் ஆண்டு ஆய்வறிக்கையின்படி, உலகில் முழு அளவிலான ஜனநாயகத்தைக் கொண்ட நாடாக நோர்வே அடையாளப்படுத்தப்பட்டுள்ளது. இரண்டாவது இடத்தில் சுவீடன் இருக்கிறது. இலங்கை 71வது இடத்தில் காணப்படுவதுடன், குறைபாடுகளைக் கொண்ட ஜனநாயகம் என அடையாளப்படுத்தப்பட்டுள்ளது. அத்துடன் இந்நாடுகள் மிக உயர் அபிவிருத்தி இலக்குகளை அடைந்த நாடுகளாகவும், சமாதானம், ஐக்கியம், நல்லாட்சி, ஜனநாயகம், ஊழலின்மை, பால்நிலை சமத்துவம், சமத்துவம், தேசிய ஒருமைப்பாடு, சமூகநீதி போன்ற விடயங்களில் முதல்நிலையில் காணப்படும் நாடுகளாக உள்ளன. பல்வேறு உலக தரப்படுத்தல்களை எடுத்து நோக்குகையில் இந்நாடுகளே முதல் இடங்களைப் பெற்றுக்கொள்கின்றன.
அத்தகைய நடைமுறைகளை இலங்கையில் கடைப்பிடிப்பது ஆரம்பத்தில் கடினமான காரியமாக அமையும். ஆனால், தொடர்ச்சியான அர்ப்பணிப்பு, வழிகாட்டல், கொள்கைகளின் நீடித்தத்தன்மை, உறுதியான ஆட்சி முறை, ஊழலைக் கட்டுப்படுத்தல் போன்ற செயற்பாடுகளை தொடர்ந்து மேற்கொள்வதன் மூலம் ஓரளவேனும் முன்னேற்றம் காணமுடியும். அதன் மூலம் ஜனநாயக மரபுகளுக்கு மதிப்பளித்து தேசிய ஒருமைப்பாட்டுடன் அபிவிருத்தியை நோக்கி நகரமுடியும்.
இது தொடர்பான கலந்துரையாடல்கள், விவாதம், ஆய்வுகள் பெரிதும் அவசியம். இத்தகைய மாதிரியை இலங்கையில் எவ்வாறு பின்பற்றலாம் அதன் நன்மைகள், சவால்கள், அவசியமான மூலோபாயங்கள், கொள்கைகள், திட்டங்கள் தொடர்பாக ஆலோசிக்க வேண்டும். நாட்டின் தற்போதைய இனத்துவ அரசியல் போக்குகள், நலிவடைந்து வரும் இன ஒற்றுமை, வீழ்ச்சிகண்டு வரும் பொருளாதார அபிவிருத்தி என்பவற்றை நோக்கும்போது இத்தகைய கலந்துரையாடல்களின் அவசியம் அதிகமாகவே உணரப்படுகின்றது. எவ்வாறாயினும், ஒரு நாட்டின் அபிவிருத்திக்கு ஜனநாயகம் பெரிதும் அவசியம் என்பதனை பின்வரும் ஐந்து காரணிகள் மூலம் புரிந்துகொள்ள முடியும்.
1.கூட்டுச்செயற்பாடுகளை மேற்கொள்ளவும் தீர்மானங்களை எட்டவும் ஜனநாயக நாடுகளில் இடம்பெறும் தேர்தல்கள் மூலம் பிரஜைகள் தமது பிரச்சினைகளுக்கான தீர்வுகளை கொள்கைத்திட்டங்களை கூட்டாக சேர்ந்து உருவாக்குவதற்கான அதிகாரத்தை பிரதிநிதிகளுக்கு வழங்குகின்றார்கள். இதன் மூலம் வேறுபட்ட சமூகங்களின் தேவைகள், பிரச்சினைகள், அபிலாசைகள், கோரிக்கைகளை அறிந்து கூட்டாக கலந்தாலோசித்து அபிவிருத்தி தொடர்பான தீர்மானங்களை மேற்கொள்வதற்கான பரந்த கட்டமைப்பை ஜனநாயகம் வழங்குகின்றது. இதன் மூலம் வளமுகாமைத்துவம், சமூக, கலாசார, அரசியல் பிரச்சினைகளுக்கான தீர்வுகள் அடையப்பெறுவதுடன், மக்கள் பிரதிநிதிகளும் பொது மக்களும் தமக்கிடையேயுள்ள இன, மத, மொழி, சாதி, பால்நிலை வேறுபாடுகளை மறந்து செயற்படுவதற்கான தளத்தை வழங்குகின்றது. ஆயினும், இதன் நடைமுறை முற்றிலும் எதிர்பார்த்தவாறு எல்லா நாடுகளிலும் இடம்பெறுகின்றதா என்ற கேள்வியையும் எழுப்ப வேண்டும். இதனை இலங்கையை உதாரணமாகக் கொண்டு சிந்திக்கலாம்.
2. இயற்கை வளமுகாமைத்துவம்: ஜனநாயகம் அதிகார துஷ்பிரயோகத்தை தடுப்பதற்கான சிறந்த வழிமுறையென சிலர் வாதிடுகின்றனர். ஆகவே, இயற்கை வளங்கள், சுற்றாடல் தொடர்பான தீர்மானங்களை ஜனநாயக வழிமுறையினூடாக மேற்கொள்வது சிறந்தது. இயற்கை வளங்களின் பயன்பாடுகளை சகல சமூகத்தினருக்கும் சமமாக பகிர்வதற்கு, அதன் பலன்களை அனுபவிக்க ஜனநாயகம் பங்களிப்பு செய்யும். இதன் மூலம் அபிவிருத்தியின் பயன்கள் சகல சமூகத்தவரையும் சென்றடையும்.
3. மாற்றத்திற்கான கருவி: அபிவிருத்தி என்பது இயக்கத்தன்மை கொண்ட ஒரு செயன்முறை. அது காலத்திற்கு காலம் பல பரிணாமங்களைப் பெறும். அதனை உள்ளக வெளியக காரணிகள் தீர்மானிக்கும். எனவே, ஒவ்வொரு அரசாங்கமும் தேசிய, சர்வதேச தேவைகளுக்கு, சவால்களுக்கு ஏற்ப கொள்கைத்திட்டங்களைத் தீட்ட வேண்டும். மாறும் சூழ்நிலைகளுக்கு ஏற்ப அபிவிருத்தி இலக்குகளும் கொள்கைகளும் மூலோபாயங்களும் மாறும் என்பதே உலகில் நாம் பொதுவாக அவதானிக்கும் விடயம். அந்தவகையில், மாற்றங்களைத் தழுவிக்கொள்ள ஜனநாயம் பெரிதும் அவசியமாகும்.
மாற்றங்களை நோக்கிச் செல்லும் போதும் எந்தவொரு இன அல்லது சமூகப் பிரிவினரும் பாதிப்புகளுக்கு அல்லது இழப்புகளுக்கு உள்ளாகக் கூடாது.
அது அச்சமூகத்தின் உரிமைகளை, நலன்களை பாதித்துவிடும். அத்தகைய காரியங்களை அபிவிருத்தி செயன்முறையில் தடுப்பதற்கு ஜனநாயகம் அவசியம். இதன் மூலம் சகல இனங்களிடையும் ஐக்கிய உணர்வினை ஏற்படுத்த முடியும்.
4.பொருளாதார வளர்ச்சிக்கான உந்துசக்தியாக ஜனநாயகம் காணப்படும்: ஒரு உறுதியான ஜனநாயக சூழலானது பொருளாதார வளர்ச்சிக்கு சாதகமாக அமையும். கல்வி, சுகாதாரம், வேலைவாய்ப்பு, வறுமை ஒழிப்பு, வருமான பகிர்வு, உற்பத்தி, விவசாயம், கைத்தொழில், பொருளாதார நடவடிக்கைகள் ஆகிய துறைகளில் யாவரும் சமமாக வளர்ச்சியைத் தழுவிக்கொள்ள ஜனநாயக சூழல் அவசியம். ஜனநாயக சூழல் இல்லாதபோது, ஆதிக்கம் செலுத்தும் ஒரு பிரிவினர் மேற்கூறிய துறைகளில் பயனடைய ஏனையோர் ஓரங்கட்டப்படுகின்றனர். இதனை இலங்கையில் சுதந்திரம் பெற்ற காலத்திலிருந்து அவதானிக்க முடியும். இவற்றை ஓரளவேனும் கட்டுப்படுத்த வேண்டுமாயின், அபிவிருத்தியின் பயன்களை யாவரும் அடைய ஜனநாயக வழிமுறை ஊடான அபிவிருத்தி தேவையாக உள்ளது. மிக முக்கியமாக, ஜனநாயக சூழல் ஒன்றிலேயே சட்டத்தின் ஆட்சியும், சட்டத்தின் முன் யாவரும் சமன் என்ற தத்துவமும் காணப்படும். இது பொருளாதார அபிவிருத்திக்கான முதலீடுகளை கொண்டு வருவதற்கு, தனியார்துறையின் பங்களிப்பினை அபிவிருத்தியில் ஊக்குவிக்க பெரிதும் அவசியமாகும்.
5.சமாதானத்தை ஏற்படுத்த உதவும்: உறுதியான ஜனநாயக பாரம்பரியம் மறறும் கட்டமைப்புக்கள் நிலையான அபிவிருத்திக்கு உதவும். அதன் மூலம் ஐக்கியம், சமாதானம் ஏற்படுவதாகப் பொதுவில் வாதிடப்படுகின்றது. ஜனநாயகமும் அபிவிருத்தியும் ஒருங்கிணைந்து செல்லும்போது அது சகல இன, மத, மொழி, சமூகப் பிரிவினரையும் அரவணைத்து செல்வதற்கு உதவும். அதன் ஊடாக ஐக்கியமும் சமாதானமும் பிறக்கும் என்ற நம்பிக்கை பரவலாகக் காணப்படுகின்றது.
(மிகுதி அடுத்தவாரம்)
கலாநிதி இரா. ரமேஷ்,
சிரேஷ்ட விரிவுரையாளர்,
பேராதனைப் பல்கலைக்கழகம்.