ரெட் புல் பெண்கள் தேசிய கிரிக்கெட் போட்டி ESoft அணி சம்பியன் | தினகரன் வாரமஞ்சரி

ரெட் புல் பெண்கள் தேசிய கிரிக்கெட் போட்டி ESoft அணி சம்பியன்

ரெட் புல் பல்கலைக்கழக கிரிக்கெட் உள்ளூர் கிரிக்கெட் தளத்தில் பெரும் தாக்கத்தை செலுத்திய நிலையில் பெண்களுக்கான ரெட் புல் பல்கலைக்கழக தேசிய இறுதிப் போட்டிகளை இந்த ஆண்டில் நடத்த தீர்மானித்தனர்.

மாபெரும் இறுதிப் போட்டிக்கு முன்னோடியாக கடந்த ஒக்டோபர் 27 தொடக்கம் 29 ஆம் திகதி வரை கண்காட்சிப் போட்டிகள் நடத்தப்பட்டதோடு இதன் இறுதி நாள் போட்டி ஒக்டோபர் 30 ஆம் திகதி இடம்பெற்றது.

இந்த நான்கு நாள் போட்டிகள் முழுவதும் கொழும்பில் கடும் மழை பொழிந்த நிலையிலும் நான்கில் மூன்று போட்டிகளை நடத்த ஏற்பாட்டாளர்களால் முடிந்தது. இதில் புதிய திறமைகள் வெளிப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

கடந்த 27 ஆம் திகதி நடைபெற்ற முதல் கண்காட்சிப் போட்டியில் Wadduwa Central மகளிர் அணிக்கு எதிராக கடும் போட்டிக்கு பின்னர் ESoft Metro Campus அணி 2 விக்கெட்டுகளால் வெற்றியீட்டியது. எனினும் 29ஆம் திகதி நடைபெற்ற போட்டியின் தேசிய இளைஞர் படையணிக்கு (NYC) எதிரான போட்டியில் Wadduwa Central அணியால் 67 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றியீட்ட முடிந்தது. துரதிஷ்டவசமாக 28ஆம் திகதி நடைபெறவிருந்த Wadduwa Central அணிக்கும் Sky Academy அணிக்கும் இடையிலான போட்டி மோசமான காலநிலையால் கைவிடப்பட்டது.

இந்நிலையில் கடந்த சனிக்கிழமை இடம்பெற்ற இறுதிப் போட்டியில் ESoft Metro Campus மற்றும் Sky Academy அணிகள் மோதிய போட்டி மழையால் குறுகிய ஓவர்களுக்கு மட்டுப்படுத்தப்பட்டிருந்தது. நாணய சுழற்சியில் வென்று களத் தடுப்பை தேர்வு செய்த Sky Academy அணி ESoft துடுப்பாட்ட வீராங்கனைகளை மட்டுப்படுத்த தவறினர். வேகமான ஆடிய ESoft அணி 14 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 103 ஓட்டங்களை பெற்றது.

மறுபுறம் Sky Academy பெண்கள் ஓட்டம் பெறவே தடுமாறினார்கள். அவர்கள் 14 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 42 ஓட்டங்களை மாத்திரமே பெற்றனர். தேசிய அணி வீராங்கனை சத்யா சன்தீபனி 7 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகளையும் 16 பந்துகளில் 18 ஓட்டங்களையும் பெற்று ஆட்ட நாயகன் விருதை வென்றார்.

இதன்படி பெண்களுக்கான முதலாவது ரெட் புல் பல்கலைக்கழக தேசிய இறுதிகளில் இறுதிப் போட்டியில் 61 ஓட்டங்களால் வெற்றியீட்டி ESoft சம்பியனானது.

2012 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட ஆண்களுக்கான தொடரில் முந்தைய 9 தொடர்களில் பல வீரர்களும் தேசிய அணியை பிரதிநிதித்துவம் செய்தனர்.

ரெட் புல் வீராங்கனை மற்றும் இலங்கை பெண்கள் கிரிக்கெட் அணித் தலைவி சாமரி அத்தபத்து இலங்கையில் பெண்கள் விளையாட்டின் வளர்ச்சியை பிரதிநிதித்துவம் செய்பவராக உள்ளார். அவரது #BigGirlsCan என்ற அமைப்பு பெண் விராங்கனைகளுக்கான தடங்கலை முறியடிப்பதாக உள்ளதோடு முன்மாதிரியாகவும் உள்ளது. ரெட் புல் பல்கலைக்கழக கிரிக்கெட்டின் பெண்களுக்கான தொடர் இதன் ஆரம்பமாகும்.

பெண்களுக்கான ரெட் புல் பல்கலைக்கழக கிரிக்கெட் இலங்கையில் பெண்கள் விளையாட்டை முன்னேற்ற உதவும் என்று ரெம் புல் நம்புகிறது. முதல் கட்டத்தில் ரெட் புல் உலக இறுதிகளை நடத்த திட்டமிட்டுள்ளது. இந்தத் தொடரில் ஜனதி அனலி, சத்யா சந்தீபனி, லக்மாலி ரஜபக்ஷ மற்றும் சன்சலா வனிகசேகர போன்ற திறமைகள் வெளிப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Comments