பொதுநலவாய நாடுகளின் விளையாட்டு விழாவிற்கான கோல் அலரி மாளிகையில் | தினகரன் வாரமஞ்சரி

பொதுநலவாய நாடுகளின் விளையாட்டு விழாவிற்கான கோல் அலரி மாளிகையில்

பிரித்தானியாவின் பர்மிங்ஹாம் நகரில் இம்முறை நடைபெறவுள்ள 22ஆவது பொதுநலவாய நாடுகளின் விளையாட்டு விழாவை முன்னிட்டு உலகளாவிய ரீதியில் 72நாடுகளுக்கு கொண்டுசெல்லப்படுகின்ற மாகாராணியின் கோல் கடந்த  (05) பிற்பகல் அலரி மாளிகையில் கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களினால் வரவேற்கப்பட்டது.

25ஆவது நாடாக கடந்த 03ஆம் திகதி மாலைதீவிலிருந்து இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட கோல் மூன்று தினங்களாக நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கும் கொண்டு செல்லப்பட்டு அண்மையில் அலரி மாளிகைக்கு கொண்டு வரப்பட்டது.

இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர்  நாமல் ராஜபக்ஷவின் ஆலோசனையின் பேரில் இந்த கோலினை வரவேற்று காட்சிபடுத்துவதற்கான ஒருங்கிணைப்பு செயற்பாடுகளை முன்னெடுக்கும் பொறுப்பு இலங்கை தேசிய ஒலிம்பிக் குழுவிற்கு உத்தியோகபூர்வமாக வழங்கப்பட்டுள்ளது.

அதற்கமைய தேசிய ஒலிம்பிக் குழுவின் தலைவர் சுரேஷ் சுப்ரமணியம்  எதிர்வரும் ஜுலை 28ஆம் திகதி பர்மிங்ஹாமில் ஆரம்பமாகும் பொதுநலவாய நாடுகளின் விளையாட்டு விழாவின் உத்தியோகபூர்வ சின்னம் மற்றும் கோலின் மூலம் வெளிப்படுத்தப்படும் கருத்தினை  பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ முன்னிலையில் முன்வைத்தார்.

அதனை தொடர்ந்து தேசிய ஒலிம்பிக் குழுவின் தலைவர் சுரேஷ் சுப்ரமணியம் அவர்களினால் பிரதமரிடம் கோல் வழங்கப்பட்டது.

“2022 Queen’s Baton Relay” (QBR) என நடைபெறும் இந்த விசேட காட்சிப்படுத்தல் திட்டம் பிரித்தானிய மகாராணியின் தலைமையில் கடந்த ஒக்டோபர் மாதம் 7ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டது.

இக்கோல்  இலங்கையிலிருந்து பங்களாதேஷிற்கு கொண்டு செல்லப்பட்டது.

இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ, பிரதமரின் செயலாளர் காமினி செனரத், இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சின் செயலாளர் அனுராத விஜேகோன், இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சின் மேலதிக செயலாளர்  விக்ரமசிங்க, விளையாட்டு அபிவிருத்தித் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் அமல் எதிரிசூரிய, தேசிய ஒலிம்பிக் சங்கத்தின் தலைவர் சுரேஷ் சுப்ரமணியம், தேசிய விளையாட்டு கவுன்சில் உறுப்பினர் யஸ்வந்த் முத்தெட்டுவேகம, தேசிய ஒலிம்பிக் சங்க செயலாளர் மெக்ஸ்வெல் த சில்வா, தேசிய ஒலிம்பிக் சங்கத்தின் சந்தன லியனகே, நிலு பெர்னாண்டோ, காமினி ஜயசிங்க, பளு தூக்கும் விளையாட்டு வீரர் சிந்தன விதானகே உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Comments