![](https://archives1.vaaramanjari.lk/sites/default/files/styles/large/public/news/2022/07/23/a5.jpg?itok=xyucTIR3)
நாட்டின் முன்னேற்றத்துக்காக மேற்கொள்ளப்படும் செயற்திட்டங்களுக்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்க தயார். அரசியல் மீது நாட்டு மக்கள் கொண்டுள்ள அவநம்பிக்கையை இல்லாதொழிக்கும் பொறுப்பு சகல தரப்பினருக்கும் உண்டென ஜனாதிபதி தெரிவில் போட்டியிட்ட முன்னாள் அமைச்சர் டளஸ் அழகப்பெரும தெரிவித்தார். பாராளுமன்றத்தில் கடந்த 20ஆம் திகதி புதன்கிழமை புதிய ஜனாதிபதிக்கான தெரிவு நிறைவடைந்த பின்னர் சபையில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
சுதந்திரத்துக்கு பின்னரான காலப்பகுதியில் நாடு தற்போது பெரும் நெருக்கடியான காலகட்டத்தை எதிர்கொண்டுள்ளது.
அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டிய காலகட்டம் இது. நாட்டின் 22,000மில்லியன் மக்களும் எம்மோடு இருப்பார்கள்.
ஜனாதிபதிக்கான தெரிவில் தம்மை முன்மொழிந்த எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, வழிமொழிந்த அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல் பீரிஸ் உள்ளிட்ட அனைவருக்கும் அனைத்துக் கட்சிகளுக்கும் நன்றியினை தெரிவித்துக்கொள்கிறேன்.
குணமடைந்த நாட்டுக்கு எழுந்து நிற்க முடியும். ஆனால் நோய் உள்ள நாடு எழுந்து நிற்க முடியாது. சூழ்ச்சியான அரசியல் கலாசாரத்தை நிறைவு செய்வதற்காகவே நான் ஜனாதிபதி தெரிவில் போட்டியிட்டேன். அரசியல் கலாசாரம் சீரழிந்துள்ள நிலையில் அதன் மீதான நம்பிக்கையை கட்டியெழுப்புவது அனைவரதும் பொறுப்பு .
தேசிய நிகழ்ச்சி நிரலுக்கு பதிலாக தனியான நிகழ்ச்சி நிரலை முக்கியமாக்கிக் கொண்டு அரசியலமைப்பிலும் அரசியலமைப்பு திருத்தத்திலும் செயற்பாடுகளை மேற்கொண்டு மக்களின் இறைமையை காட்டிக் கொடுத்து சுதந்திரம் அடைந்த தினத்திலிருந்து நாம் அனுபவித்த வஞ்சகமான அரசியல் கலாசாரத்துக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்காகவே நான் போட்டியிட்டேன்.
அந்த வகையில் வாக்குகள் மற்றும் இலக்கத்தின் மூலம் தோல்வியடைந்தாலும் எனக்கு தைரியமூட்டிய, ஒத்துழைப்புகள் வழங்கிய அனைவருக்கும் நான் நன்றிகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.
வரலாற்றில் முதல் தடவையாக சர்வகட்சி அரசாங்கம் ஒன்றை அமைப்பதற்கான அவசியம் எமக்கு இருந்தது.நாம் தோல்வியடைந்தாலும் அதற்கான நாட்டு மக்களின் எதிர்பார்ப்பு பாதிப்படையாது.பெறுபேறுகள் எதுவாக இருந்தாலும் இந்த ஒன்றிணைப்பு உலகிற்கே முன்னுதாரணத்தை வழங்கியுள்ளது.