பதுக்கலை ஊக்கப்படுத்தும் மக்களின் மனோபாவம் | தினகரன் வாரமஞ்சரி

பதுக்கலை ஊக்கப்படுத்தும் மக்களின் மனோபாவம்

நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி மக்களுக்கும் ஆட்சியாளர்களுக்கும் பாதிப்பை உண்டாக்கியிருக்கலாம். அதனால் அவர்கள் தீராத பிரச்சினைகளுக்குள்ளாகியிருக்கிறார்கள் என்பது உண்மையே. ஆனால் இதற்குள் மிகப் பெரிய நன்மைகளைப் பெற்றிருப்பது ஒரு பெரிய கூட்டம். அது வணிகத்தரப்பினராகும்.  

முன்னெப்போதும் பெற்றிராத லாபத்தை இந்த நெருக்கடிக் காலத்தில் வர்த்தகர்கள் பெற்றிருக்கின்றனர். இன்னும் லாபத்தைப் பெற்றுக் கொண்டிருக்கிறார்கள்.  

 யுத்த காலத்தில், யுத்தம் நடைபெற்ற இடங்களில் கூட இந்த மாதிரி எல்லை மீறிய, கட்டற்ற, பொறுப்பற்ற, இதயமே இல்லாத சிறுமைத்தனமான வணிகம் நடைபெறவில்லை. அப்பொழுது ஓரளவுக்கு மக்களைக் குறித்தும் சமூகத்தைக் குறித்தும் சிந்திக்கும் ஒரு போக்கு, ஒரு தன்மை இருந்தது. அதை விட அன்று இவற்றைக் கண்காணிப்பதற்கான அதிகாரத் தரப்புகளும் இருந்தன.  

இப்பொழுது நிலைமை தலைகீழாகி விட்டது. அரசாங்கம் ஆட்டம் காணத் தொடங்கியதைத் தமக்குச் சாதமாகப் பயன்படுத்த முற்பட்டது வர்த்தகத் தரப்பு. அதன் இயல்பே அதுதான். தவிச்ச முயலை அடிப்பது. யுத்தத்தின்போதும் ஒரு குறிப்பிட்ட தரப்பு இப்படிச் செய்ததுண்டு.  

இங்கே நாட்டில் – அரசாங்கத்தில் ஏற்பட்ட நெருக்கடியையும் கட்டமைப்புச் சிதைவையும் தமக்குச் சாதமாகப் பயன்படுத்திய வணிகத்தரப்பைக் குறித்துக் கவனம் செலுத்துவதற்கோ தவறுகளைக் கட்டுப்படுத்துவதற்கோ யாரும் அக்கறைப் படவில்லை. அரசும் சரி, பொது அமைப்புகள், ஊடகங்கள், அரசியற் கட்சிகள், தலைவர்கள் உட்பட எந்தத்தரப்பும் இதைப்பற்றிச் சிந்திக்கவே இல்லை.  

பதிலாக இவர்களுடைய கரிசனை முழுவதும் அரசியல் நெருக்கடியிலேயே குவிந்திருந்தது.  

இதனால் பகற்கொள்ளை என்று சொல்லக்கூடிய அளவுக்கு இந்த அநீதி – அப்பட்டமான கொள்ளையடிப்பு – சுரண்டல் நடக்கிறது. இதன் காரணமாகப் பல லட்சம் மக்கள் தினமும் - ஒவ்வொரு நொடியும் பாதிக்கப்படுகின்றனர். இதைக்குறித்து எங்கும் முறையிடவும் முடியாது. யாரிடத்திலும் பேசவும் முடியாது. அந்தளவுக்கு நாடு இறுகிப் போயுள்ளது. அல்லது எல்லாமே சீரழிந்து விட்டன.   இதுதான் துயரம்.  

அந்நியச் செலாவணியான டொலர் பிரச்சினை – தட்டுப்பாடு – வந்தபோது பொருட்களின் இறக்குமதியில் தடங்கல் அல்லது தடை ஏற்பட்டது. இதனால் சட்டெனப்பொருட்களுக்குத் தட்டுப்பாடு உருவாகியது. பதுக்கல்கள் நிகழ்ந்தன. ஆகவே இயல்பாகவும் செயற்கையாகவும் உருவாக்கப்பட்ட தட்டுப்பாட்டில் படபடவென பொருட்களின் விலை ஏறியது. அல்லது விலை ஏற்றப்பட்டது.  

இந்தச் சந்தர்ப்பத்தில் பதுக்கலைக் கட்டுப்படுத்தவோ கண்காணிக்கவோ அதற்குப்பொறுப்பான அரச நிர்வாகத் தரப்பு – விலைக்கட்டுப்பாட்டுச் சபை உள்பட அனைத்துத் தரப்பும் தவறின.  

ஆரம்பத்தில் சில நடவடிக்கைகள் அங்குமிங்குமாக மேற்கொள்ளப்பட்டதுண்டு. ஆனால் அதையும் கடந்து அல்லது அவர்களை உச்சிக் கொண்டு தமது கைங்கரியத்தைக் காட்டத் தொடங்கினர் வியாபாரிகள். இறுதியில் வர்த்தகர்களே வெற்றியீட்டினர். இரண்டு மூன்று மாதங்களில் தங்களைக் கட்டுப்படுத்தக்கூடியவர்களோ கேட்கக் கூடியவர்களோ இல்லை என்ற அளவுக்கு வளர்ச்சியடைந்தனர். இப்பொழுது இவர்கள் மாபெரும் மாஃபியாக்களாகி விட்டனர்.  

பதுக்கலைக் கட்டுப்படுத்தவில்லை என்ற நிலையில் அதில் ருசிப்பட்டவர்கள் அடுத்ததாக விலையை ஏற்றத் தொடங்கினார்கள். முதலில் நாளுக்கு நாள் ஏறிய - ஏற்றப்பட்ட விலை பின்னர் காலையில் ஒரு விலை, மாலையில் ஒரு விலை என்றானது. இது மேலும் வளர்ச்சியடைந்து மணித்தியாலங்களுக்கிடையில் வேறுபடும் அளவுக்கானது. இப்பொழுது நொடிக்கொரு விலை என்றாகி விட்டது.  

இதை எதிர்க்க முடியாத நிலைக்குள்ளாகினர் மக்கள். அவர்களைப் பொறுத்தவரையில் எப்படியாவது பொருட்களைப் பெற்றுக் கொள்ள வேண்டும் என்ற கட்டம். இல்லையென்றால் தேவைக்கதிகமாக அலைந்து அதிக சிரமங்களைப் பட வேண்டும். சிலவேளை குறித்த பொருளைப் பின்னர் பெற்றுக் கொள்ளவே முடியாது என்றும் ஆகி விடும்.  

அதனால் எப்படியோ என்ன விலைக்கோ கிடைக்கின்ற பொருளைப் பெற்றுக் கொள்வோம் என்ற முடிவுக்குப் பலரும் வந்தனர். இதை மேலும் தமக்கான வாய்ப்பாகப் பயன்படுத்தியது வணிகத் தரப்பு.  

இந்த வளர்ச்சி இன்று எல்லா இடங்களிலும் உருவாகி மனச்சாட்சிக்கே விரோதமான அளவுக்குள்ளது. மக்கள் தங்களுடைய கொள்வனவுச் சக்திக்கு அப்பால் பொருட்களைப் பெற முடியாமல் திணறுகின்றனர். இவ்வளவுக்கும் பெரும்பாலான பொருட்கள் ஏற்கனவே கையிருப்பில் இருந்தவை. அல்லது இங்கே களஞ்சியங்களில் இருந்தவையாகும்.  

உதாரணமாக, சைக்கிள்கள், வாகன உதிரிப்பாகங்கள், துணி மற்றும் உடைகள், வீட்டுப்பாவனைப்பொருட்கள், மின் உபகரணங்கள், மின்சாரப் பொருட்கள், மரப் பொருட்கள் என இந்தப் பட்டியல் நீளும். எரிவாயு, பெற்றோல், சீமெந்து, உரம், அரிசி, சீனி, மா, பருப்பு மற்றும் சில உணவுப்பொருட்கள் போன்றவற்றின் விலை உயர்வது தவிர்க்க முடியாதது. அவை அவ்வப்போது இறக்குமதி செய்யப்படுகின்றவை. அவற்றின் விலையை அரசாங்கமே அறிவித்தது. அல்லது அதற்குரிய நிறுவனங்கள் அறிவித்தன.  

ஏனையவை அப்படியல்ல. ஆரம்பத்தில் – மூன்று மாதங்களின் முன்பு சைக்கிளொன்றின் விலை 30ஆயிரமாக இருந்தது. இப்பொழுது தொண்ணூறு ஆயிரத்தைக் கடந்துள்ளது. இது எப்படி ஏற்பட்டது? உதிரிப்பாகங்களின் விலையும் அப்படித்தான். முதல்நாள் இரவு ஒரு விலை. மறுநாள் காலை அதே கடையில், அதே பொருள் வேறு விலையில் – கூடிய விலையில் விற்கப்பட்டது.  

இந்த எல்லை மீறலுக்கு அளவே இல்லை. இங்கே நாம் கவனிக்க வேண்டியது என்னவென்றால் நாட்டிலே ஊழல், கொள்ளை லாபமீட்டல், சமூக விரோதச் செயற்பாடுகள் போன்றவற்றுக்கு எதிராக ஒரு பக்கத்தில் மக்கள் போராடிக் கொண்டிருக்கிறார்கள்.  

மறுபக்கத்தில் அத்தகைய நடவடிக்கைகள் சத்தமின்றி – அச்சமின்றி நடந்து கொண்டிருந்தது. நடந்து கொண்டிருக்கிறது.  

ஆட்சியாளர்கள் மட்டும் தவறிழைக்கவில்லை. நாட்டிலுள்ள பல்வேறு தரப்பினரும்தான் தவறிழைக்கின்றனர். கொள்ளையடிக்கின்றனர். மக்களை ஏமாற்றிப் பிழைக்கின்றனர் என்பதைத் தெரிந்து கொண்டும் பல அரசியற் தலைவர்களும் காணாத மாதிரியே இருக்கின்றனர். இறுதியில் எரிபொருளைக் கூடப் பதுக்கி கறுப்புச் சந்தையில் அதை விற்கும் நிலை ஏற்பட்டது. இதனால் எரிபொருளைப் பெற்றுக் கொள்வதில் ஏகப்பட்ட நெருக்கடிகள் உருவாகின.  

இதிலே வேடிக்கை என்னவென்றால் இப்பொழுது 520ரூபாய்க்கு விற்கப்படும் எரிபொருள் விநியோகத்தைக் கண்காணிப்பதற்கு நான்கு ஐந்து அரச உத்தியோகத்தர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். 30ஆயிரம் ரூபாய்ச் சைக்கிள் ஒரு லட்சம் ரூபாய்க்கு விற்கப்படுவதைக் கண்காணிப்பதற்கு யாருமே இல்லை.  

இது தனியே சைக்கிளுக்கு மட்டுமான ஒன்றல்ல. அனைத்துப் பொருட்களுக்குமான பிரச்சினையே.  

மக்களின் முன்னேற்றத்துக்காகவும் அவர்களுடைய விடுதலைக்காகவும் தங்கள் உடலையும் உயிரையும் அர்ப்பணிக்கின்றது ஒரு தரப்பு. தேசத்தின் நன்மைகளுக்கான தங்களை அர்ப்பணித்துச் செயற்படுகின்றனர் பலர். இந்த மாதிரியானவர்களின் மத்தியில் இவர்களோ – இந்தக் கொள்ளையர்களோ எந்தவிதமான மனச்சாட்சியும் இல்லாமல் அறாவிலையில் பொருட்களை விற்கிறார்கள். கண்முன்னே கொள்ளையடிக்கிறார்கள். இதைப்பற்றி நமது சமூகத்தின் அக்கறை என்ன? பதில் என்ன?

கருணாகரன் 

Comments