இலங்கை மீண்டெழ புலம்பெயர் தமிழர்களது ஒத்துழைப்பு தேவை | தினகரன் வாரமஞ்சரி

இலங்கை மீண்டெழ புலம்பெயர் தமிழர்களது ஒத்துழைப்பு தேவை

இலங்கை மீண்டெழ புலம்பெயர் தமிழ் மக்களின் உதவிகளும், ஒத்துழைப்புக்களும் கட்டாயம் தேவையென்று நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார்.

ஜெனீவா சென்றுள்ள இலங்கை குழுவிலுள்ள முக்கியஸ்தரான நீதி அமைச்சர் விஜேதாசராஜபக்‌ஷ, சர்வதேச ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

தமிழ் மக்களின் அனைத்துப் பிரச்சினைகளுக்கும் ஓர் ஒழுங்குமுறையில் தீர்வுகளைக் காணும் பணியை எமது அரசாங்கம் முன்னெடுக்குமென்றும், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கம் இனப் பிரச்சினைக்கு நிரந்தர அரசியல் தீர்வை முன்வைத்தே தீருமென்றும் நீதி அமைச்சர் விஜேயதாஸ ராஜபக்ஷ உறுதியளித்துள்ளார்.

மேலும் தெரிவிக்கையில்,

சிறைச்சாலைகளிலுள்ள தமிழ் அரசியல் கைதிகள் தொடர்பில் நல்ல தீர்வு முன்வைக்கப்படும். அந்தக் கைதிகளில் ஒரு தொகுதியினர் விரைவில் விடுவிக்கப்படவுள்ளனர். காணி விடயம் மற்றும் காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரத்துக்கும் தீர்வுகள் பெற்றுக் கொடுக்கப்படும்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் ஜனாதிபதி நடத்திய பேச்சின்போது இதற்கான உத்தரவாதங்கள் வழங்கப்பட்டுள்ளன.

தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வுகளைக் காணாமல் புலம்பெயர் தமிழ் மக்களுடன் இலங்கை அரசாங்கம் நெருக்கமாகச் செயற்பட முடியாதென்று தெரிவிக்கப்படும் கருத்துடன் நான் உடன்படுகின்றேன் என்றார்.

Comments