ஸ்பெயினில் நடைபெறும் 23 வயதுக்குட்பட்ட உலக மல்யுத்த சம்பியன்ஷிப் போட்டியில் கலந்து கொள்ள சென்றிருந்த மூன்று இலங்கை வீரர்கள் காணாமல் போயுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 22ஆம் திகதி 06 பேர் கொண்ட அணியில் இருவர் காணாமல் போனதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதனைத் தொடர்ந்து மூன்றாவது விளையாட்டு வீரரும் மறு நாள் காணாமல் போனதாக இலங்கை மல்யுத்த சம்மேளனத்தின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
எனினும், இவர்கள் காணாமல்போனமை தொடர்பில் ஸ்பெய்ன் அதிகாரிகளுக்கு இலங்கை அதிகாரிகளால் தகவல் வழங்கப்பட்டபோதும், ஸ்பெய்ன்அதிகாரிகள் அதில் பெரிதும் அக்கறை கொள்ளவில்லையென தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது இலங்கை அதிகாரிகளிடையே திகைப்பை ஏற்படுத்தியுள்ளதாக, இலங்கை மல்யுத்த சம்மேளன தரப்புகள் தெரிவித்துள்ளன.
”நாங்கள் உடனடியாக பொலிஸாருக்கு தகவல் கொடுத்தோம், ஆனால் காணாமல் போன வீரர்கள் நாட்டில் தஞ்சமடையலாம் என்றும், அவர்கள் எந்த குற்றச் செயலிலும் ஈடுபடாத வரை வேலை தேட முடியும் என்றும் ஸ்பெய்ன் அதிகாரிகள் பதிலளித்தனர்" என்று அந்த அதிகாரி கூறினார்.
முன்னதாக, கடந்த ஆகஸ்ட் தொடக்கத்தில் 2022 பொதுநலவாய விளையாட்டுப் போட்டியின் போது ஒன்பது தடகள வீரர்களும் ஒரு அதிகாரியும் காணாமல் போயிருந்தமை குறிப்பிடத்தக்கது.