என்ன கற்றுக் கொண்டோம்? எதை கற்றுக் கொடுக்கிறோம்? | தினகரன் வாரமஞ்சரி

என்ன கற்றுக் கொண்டோம்? எதை கற்றுக் கொடுக்கிறோம்?

ஒரு கால் இல்லாத இளைஞனொருவன் அம்மாவுடன் வசித்து வருகிறான். கால் இல்லாத ஊனமும் தனிமையும் அவனை வாட்டும். ஒரு சமயம் அம்மாவுடன்  பஸ்ஸில் போகும்போது பெண்கள் சீட்டில் உட்கார்ந்திருப்பான். ஒரு பெண்மணி அவனைக் கண்டபடி திட்டும். அவன் உடனே எழ அவனுக்கு கால் இல்லாததைப் பார்த்து திட்டியவன் மன்னியுங்க என்று கேட்பாள். அது அவனுக்குப் பெரிய துயரத்தைத் தரும்.  

ஒரு கட்டத்தில் அவன் தற்கொலை செய்ய முடிவெடுத்து, வீட்டுக்கருகிலுள்ள   ரயில் தண்டவாளத்தில் போய் படுத்து கிடக்கிறான். ரயில் வருகிற நேரம். ஒரு குஷ்டரோகி பிச்சைக்காரன் அந்த இளைஞனைப் பார்த்து ஓடிவந்து காப்பாற்றி விடுகிறான். பின்பக்கத்தில் இருக்கும் ஒரு கல் மண்டபத்துக்கு அழைத்துப்போய் அந்த இளைஞனிடம் சொல்கிறான். "நான் ஒரு குஷ்டரோகி எப்படி இருக்கிறேன் என்று பார்த்தாயா? இப்படி தான் அன்றுகூட ரயிலில் விழப்போன ஒரு குழந்தையை காப்பாற்றினேன். அந்தம்மா வந்து குழந்தையை வாங்கிவிட்டு நன்றி சொல்லாமல் என்னைத் திட்டிவிட்டு போனாள். அவ்வளவு அருவருப்பாகவா இருக்கேன் நான். அப்படிபட்ட நானே உயிரோடு இருக்கும்போது உனக்கெல்லாம் என்ன இந்த கால் ஊனம் பெரிய குறையா? என அறிவுரை கூறி அந்த இளைஞனின் நம்பிக்கையை தூண்டி விடுகிறான்.  

தற்கொலை முயற்சியை விட்டுவிட்டு வாழ்க்கையின் மீதான புதிய நம்பிக்கைகளோடு தூங்குகிறான் ஊனமுற்றவன். காலையில் பார்த்தால் ரயில் தண்டவாளத்தில் ஒருவர் செத்துக்கிடக்கிறார். அந்த இளைஞன்தான் செத்துப்போய் விட்டான் எனப் பயந்து ஓடி வருகிறாள் அவன் அம்மா "அம்மா நான் இருக்கிறேன் அம்மா.." என அந்த இளைஞன் கத்திக்கொண்டே வருகிறான்.

ஆனால் அங்கே அந்த குஷ்டரோகி பிச்சைக்காரன் செத்துக்கிடக்கிறான். முந்தைய இரவு இளைஞன் தூங்கிய பிறகு அந்த பிச்சைக்காரன் "இப்படிப்பட்ட ஒருவனே இந்த சமூகத்தில் வாழக் கூச்சப்பட்டு சாக நினைக்கிறான். நாம் இவ்வளவு அவமானங்களுக்கு நடுவில் இப்படி வாழ்கிறோம்" என யோசித்ததால் தண்டவாளத்தில் குதித்திருப்பான். செத்துப்போன குஷ்டரோகியைப் பார்த்து அந்த இளைஞன் சொல்கிறான்.

"அம்மா! அவன் எனக்கு வாழக் கற்றுக்கொடுத்தான். நான் அவனுக்கு சாகக் கற்றுக்கொடுத்துட்டேன்" என கதறி அழுகிறான். ஆகவே நாம், நம் சக மனிதர்களுக்கு எதைக் கற்றுத் தரப்போகிறோம் என்பதில்தான் இருக்கிறது. நம் வாழ்க்கையின் அர்த்தம் நல்லதையே கற்றுத்தருவோம்.

சோ. வினோஜ்குமார்,
தொழினுட்ப பீடம்,
யாழ். பல்கலைக்கழகம், கிளிநொச்சி.

Comments