![](https://archives1.vaaramanjari.lk/sites/default/files/styles/large/public/news/2019/12/07/q15.jpg?itok=edLm4snJ)
டெங்குவின் காய்ச்சல் தாக்கம் உலகமெங்கும் பரவி வருகிறது. டெங்கு காய்ச்சல் ஏற்படுவதற்கு பல காரணங்கள் இருந்தாலும், கட்டுப்படுவதற்கு முறையான சிகிச்சை உடனே மேற்கொள்வது மிக அவசியமான ஒன்று. டெங்கு காய்ச்சல் ஏற்பட்டால், இதனை ஆரம்பத்தில் கண்டறிவது மிக கடினம். டெங்குவை பரப்பும் நுளம்பு கடித்த நான்கு நாட்கள் முதல் 7நாட்களுக்குள் அதிக காய்ச்சல் வெளிப்படும்.
முதலில் இரத்த பரிசோதனை மேற்கொண்டு இரத்த அணுக்களின் அளவு போதுமானதாக இருப்பதை உறுதிசெய்து கொள்ள வேண்டியது அவசியமாகும். டெங்கு காய்ச்சல் பொதுவாக 104 டிகிரி அளவை தாண்டிவிடும். இத்தகைய அதிக வெப்பநிலை அளவை கட்டுப்படுத்த மருந்துகள் சாப்பிடுவதைத் தவிர முழுமையாக ஓய்வு எடுப்பதும், திரவ உணவுகளை அதிகம் உட்கொள்வதும் அவசியம்.
உடல் வலியும் காய்ச்சலுக்கான அறிகுறிதான். ஆரம்பத்தில் மூட்டுகள், தசை நாண்கள், எலும்பு பகுதிகளில் வலி அதிகமாக இருக்கும். டெங்கு காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டால் தசைகளில் வலி அதிகரிக்கும். டெங்கு காய்ச்சலின் மற்றொரு அறிகுறியாக திடீரென்று கடுமையான தலைவலி ஏற்படும். அப்படி வலி அதிகமாக இருக்கும் சமயத்தில் கண் பகுதியில் குளிர்ச்சித் தன்மை நிலவும். காய்ச்சலை காட்டிலும் தலைவலி தீவிரமாக இருந்தால் அது டெங்கு காய்ச்சலுக்கான அறிகுறியாகும்.
டெங்கு காய்ச்சலுக்கு பிந்தைய அறிகுறியாக நாட்பட்ட மூட்டுவலி உண்டாகும். இந்த காய்ச்சலின்போது உடல் வலி அதிகமாக இருப்பதற்கு உடலில் விட்டமின்கள், தாதுக்கள் குறைவதே காரணமாகும். ஆதலால் டெங்கு பாதிப்புக்குள்ளாகுபவர்கள் விட்டமின் உள்ளிட்ட ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளை அதிகம் சாப்பிட வேண்டும். டெங்கு காய்ச்சலின் மற்றொரு அறிகுறியாக சருமத்தில் சிவப்பு நிறத்தில் தடிப்புகள் உருவாகும். சில சமயத்தில் அதிலிருந்து இரத்தம் வழியும். இந்த தடிப்புகள் காய்ச்சல் உருவான ஓரிரு நாட்களில் வெளிப்படும். அப்போது நோயாளிகளின் கண்கள் மஞ்சள் நிறத்தில் காணப்படும். சருமமும் வெளிர் நிறத்திற்கு மாறும்.
டெங்கு காய்ச்சல் பரவுவதை தவிர்க்க சரியான தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். டெங்கு கொசுக்கள் வீட்டின் உட்புற பகுதிகள், வீட்டைச் சுற்றியுள்ள பகுதிகளையும் சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும். நுளம்பு கடிப்பதை தவிர்க்க உடலை முழுவதும் மூடும் ஆடைகளை அணிய வேண்டும். கொசுக்களை விரட்டும் நிவாரணிகளையும் பயன்படுத்தலாம். படுக்கை அறையில் கொசு வலைகளை பயன்படுத்துவது நல்லது. பகலில் தூங்குவதாக இருந்தாலும் கொசு வலையை பயன்படுத்த வேண்டும்.
சோ. வினோஜ்குமார்,
தொழில்நுட்ப பீடம்,
யாழ். பல்கலைக்கழகம்,
கிளிநொச்சி.