![](https://archives1.vaaramanjari.lk/sites/default/files/styles/large/public/news/2020/06/14/z_04-Local-02.jpg?itok=4GUIQyYd)
தேர்தல் காலக் களைகட்டல்கள் கெடுபிடிகள் இம்முறை பெரிதளவில் இல்லாதிருக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. கொரோனா வைரஸை இல்லாதொழிக்கப் பின்பற்றப்படும் சமூக இடைவெளி முகக்கவசம் அணிதல் அடிக்கடி கைகளைக் கழுவுதல் உள்ளிட்ட புதிய நடைமுறைகள் புதியதொரு புரியாத மன இடைவெளியை ஏற்படுத்தியுள்ளது. சமூக இடைவெளிகளைப் பேணுமாறு அடிக்கடி விடுக்கப்படும் எச்சரிக்கைகளை மக்கள் தமக்கானவையாகக் கொள்ளாததால் தேவையற்ற மன உளைச்சல்களக்கு உள்ளாகின்றனர்.
ஜனநாயகத்தை நிலைநாட்ட மக்களின் வாக்குரிமையை மதிக்க வேண்டி ஏற்பட்டுள்ளதால் கொரோனாவுடன் வாழப்பழகும் ஓரளவு அச்சம் தெளிந்த சூழலுக்குள் நாம் தேர்தலை எதிர்கொள்ளவுள்ளோம்.
பாராளுமன்றத்தையும் கலைத்து இரண்டு தடவைகள் தேதி குறித்தும் தேர்தலை நடத்துவ தற்கேதுவான சூழல் ஏற்படவில்லை எத்தனை மாதங்களுக்கு இவ்வாறு ஒத்தி வைத்துக்கொண்டே வருவது? பாராளுமன்றத்தை மீளக் கூட்ட முடியாதென்ற நிலையில் கொரோனா முடியும் வரை தேர்தலை நடத்தக் கூடாதென்ற வாதங்களில் தேர்தலுக்கான நாள் குறிப்பதும் சிக்கலானது இன்னும் இரண்டு வருடங்களுக்காவது கொரோனா அச்சம் தொடரத்தான் செய்யுமென்கிறது உலக சுகாதார ஸ்தாபனம்.
கொரோனா முடியும் வரை தேர்தலுக்குக் காத்திருப்பதா? எனவே எதிர்கொள்ள நேர்ந்துள்ள புதிய சூழலில் தேர்தல் நிலைமைகள் எவ்வாறிருக்கும்? இதில் எவ்வாறு நாம் நடந்து கொள்வது? இதில் கட்சிகள்தான் கட்டாயம் வாக்காளர்களை வழி நடத்த வேண்டும். இரண்டாம் பட்சமாகவே ஏனைய அறிவுரைகள் ஆலோசனைகள்.
பெரியளவில் பொதுக் கூட்டங்கள் இல்லாது போனால் சிறு சிறு கூட்டங்கள் பல தேவைப்படலாம். இதற்கான செலவுகளிருக்க சிரமங்களே பெரும் தலையிடியாகப் போகின்றன. பதாதைகள் போஸ்டர்கள் விளம்பரச் செலவுகள் விண்ணைத் தொட்டு நிற்கும். இணையங்கள் சமூக வலைத்தளங்களில் முன்னெடுக்கப்படும் பிரசாரங்கள் குறிப்பிட்ட ஒரு வர்க்கத்தினரையே சென்றடைந்தாலும் பெரிதாகக் கவர்ச்சி வசீகரங்களை ஏற்படுத்தாது. கட்சித் தலைவர்கள் வேட்பாளர்கள் மக்கள் முன் நேரடியாகத் தோன்றி கையசைத்து கைகொடுத்து தலைவர்கள் தோளில் சுமந்து செல்லப்படுவதில்தான் வாக்காளர்களுக்குத் திருப்தி. பெருமிதம். மேலும் சில தாய்மார் வயதான தந்தைமார் பிரதேச முக்கியஸ்தர்களின் வீடுகளுக்குச் சென்று அரசியல் தலைவர்கள் சுகம் விசாரிப்பது இருக்கிறதே, முழுக் கிராமத்திற்குமே இது பெரிய விளம்பரம். எனினும் இந்நிலைமைகள் இம்முறையிருக்குமோ தெரியாது.
வாக்குச் சாவடிகளில் நீண்ட வரிசைகளில் காத்திருப்பதென்பது வாக்காளர்களுக்குச் சாத்தியமற்றதே. இவ்விடத்தில்தான் வாக்குகளும் விலை பேசப்பட வாய்ப்புகள் உள்ளன. கொரோனாவுக்கு அஞ்சி வீடுகளில் இருப்போரை உற்சாகப்படுத்தவும் வாக்களிக்க வைக்கவும் நிறையப் பேரம் பேசல்கள் நடக்கலாம். வாகனங்களில் இவர்களை ஏற்றியிறக்குதல் சமூக இடைவெளிகளைப் பேணுவதில் எத்தனை சிரமங்கள் எழுமோ தெரியாதே!
உண்மையில் கொரோனா ஏற்படுத்தியுள்ள பீதியிருக்கிறதே குண்டுப் புரளியையும் விடக் கொடியதாகவுள்ளது. சமூகமே வளைத்து நின்று குண்டுதாரியை அல்லது பயங்கரவாதியைப் பிடிக்க முடியும்.
ஒழிக்க இயலும். சமூகமே கொரோனாப் பீதியால் புரள்கையில் யார் யாரைப் பிடிப்பது? எவர் எவரைச் சந்தேகிப்பது?
வீட்டுக்கு வரும் விருந்தாளி அலுவலகம் வரும் வாடிக்கையாளர் வீதியால் வரும் நண்பர்களை அடையாளமே காண இயலாத விசித்திர நிலைமைகள். முகக் கவசமும் மனக் கிலேசமும் ஒருவரையொருவர் அச்சத்துடன் நோக்க நேரிட்டுள்ளது. யாரும் முகக் கவசமின்றி வீட்டுக்கு வந்தால் நமக்கு ஏற்படும் சங்கடம் சொல்லுந்தரமன்று. இந்தச் சுபாவங்கள் சூழ்நிலைகளில்தான் ஜனநாயகத்தை காப்பாற்றும் படலமும் வந்துள்ளது.
வழமையாக அறுநூறு கோடி ரூபா தேவைப்படும் பொதுத் தேர்தலுக்கு இம்முறை தொள்ளாயிரம் கோடி ரூபா தேவைப்படுமென்கிறது செயலகம். இதில் சில குடும்பச் செலவுச் சிக்கனங்களையும் குறிப்பிட்டேயாக வேண்டும். பெண்களுக்கு Facial அழகு படுத்தலுக்கான செலவுகள் குறைந்திருக்கும். யார் பார்வைக்கும் படாத முகத்தை அழகுபடுத்தி என்ன பயன்? காதலர்கள் தங்கள் அன்பை அவசரத்திற்கு வெளிப்படுத்தும் வாய்ப்பையும் இந்தக் கொடிய கொரோனா மூடிவிட்டதே!
இதில் எறியப்படவுள்ள அரசியல் பந்துகள் எட்டப்படவுள்ள ஜனநாயக இலக்குகள் எப்படியிருக்கும்? ஐக்கிய தேசியக் கட்சி அதிலிருந்து வெளியேறியுள்ள ஜனநாயக மக்கள் சக்தி இதன் பங்காளிகளாகியுள்ள சிறுபான்மைத் தலைமைகளின் எதிர்பார்ப்புகள் எவரும் எதிர்வுகூறுவதைப் போலிருக்காதென்றே தோன்றுகின்றது.
இந்த நேரத்தைப் பயன்படுத்தியாவது தனித்துவ தலைமைகள் தனித்துக் களமிறங்கி இருக்கலாமென்பது பலரது விருப்பம். இவ்வாறான பலரது விருப்புக்கள் வெறுப்புக்களாகி விடாதவாறு இத் தலைமைகள் எப்படி நடந்துகொள்ளப் போகின்றன?
இந்நிலையில் மக்கள் கூட்டம் கொத்துக் கொத்தாகச் செத்து மடிகையில் பதினொரு பேரையே இலங்கை இழந்திருக்கிறது. இது எதிரணிகளின் எறிகணைகளிலிருந்து அரசைப் பாதுகாத்திருக்கிறது. இப்படி பெரிய மவுசுள்ள ஒரு தேர்தலில் எதிர்த்து நின்று களமாட இத்தலைமைகள் எதனைச் செய்யும்? எவற்றில் சாதிக்கும்?
சுஐப் எம்.காசிம்