இந்தியாவின் தலைசிறந்த விஞ்ஞானி, தொழில்நுட்ப வல்லுநர், மிகப்பெரிய பொருளாளர், இந்தியாவின் 11 வது குடியரசு தலைவர், இந்திய ஏவுகணை நாயகன், இந்திய விஞ்ஞான வளர்ச்சியின் தந்தை, சிறந்த ஆசிரியர் மற்றும் அனைவராலும் மதிக்கத்தக்க அற்புதமான பேச்சாளர், எதிர்கால இளைஞர்களின் முன்மாதிரியாக கருதப்படுபவர்தான் ஏ.பி.ஜே. அப்துல் கலாம்.
இவர் 1931 ஆம் ஆண்டு, ஒக்டோபர் 15 ஆம் திகதி ஜைனுலாப்தீன், ஆஷியம்மா தம்பதிகளுக்கு மகனாக தமிழ்நாடு இராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள பாம்பன் தீவில் அமைந்துள்ள இராமேஸ்வரத்தில் பிறந்தார்.
இராமேஸ்வரத்திலுள்ள தொடக்கப்பள்ளியில் தனது கல்வியை தொடங்கினார். இவரது குடும்பம் ஏழ்மையில் இருந்ததால், இளம் வயதிலேயே தன்னுடைய குடும்பத்திற்காக வேலைக்குச் செல்லவேண்டியிருந்தது. பாடசாலை நேரம் போக ஏனைய நேரங்களில் இவர் செய்தித்தாள்கள் விநியோகம் செய்தார்.
பள்ளிப்பருவத்தில் ஒரு சராசரி மாணவனாகவே வளர்ந்த இவர் தன்னுடைய பள்ளிப்படிப்பை முடித்தபிறகு, திருச்சி சென். ஜோசப் கல்லூரியில் இயற்பியல் பயின்றார். 1954ஆம் ஆண்டு, இயற்பியலில் இளங்கலை பட்டம் பெற்றார். ஆனால், இயற்பியல் துறையில் ஆர்வம் இல்லை என உணர்ந்த இவர், 1955 ஆம் ஆண்டு தன்னுடைய விண்வெளி பொறியியல் படிப்பை சென்னை எம்.ஐ.டி-யில் தொடங்கினார். பின்னர் அதே கல்லூரியில் முதுகலைப் பட்டமும் பெற்றார்.
1960 ஆம் ஆண்டு வானூர்தி அபிவிருத்தி அமைத்தல் பிரிவில் விஞ்ஞானியாக தன்னுடைய ஆராய்ச்சி வாழ்க்கையைத் தொடங்கிய அப்துல் கலாம், ஒரு சிறிய ஹெலிகொப்டரை இந்திய இராணுவத்திற்காக வடிவமைத்து கொடுத்தார்.
பின்னர், இந்திய விண்வெளி ஆராய்ச்சி கூடத்தில் (ISRO) தனது ஆராய்ச்சிப்பணிகளைத் தொடர்ந்த அவர், துணைக்கோள் ஏவுகணைக் குழுவில் செயற்கைக்கோள் ஏவுதலில் முக்கிய பங்காற்றினார்.
1980ஆம் ஆண்டு SLV -III ராக்கெட்டைப் பயன்படுத்தி ரோகினி- I என்ற துணைக்கோளை வெற்றிகரமாக விண்ணில் ஏவச்செய்தார். இது அவருக்கு மட்டுமல்லாமல், இந்தியாவிற்கே ஒரு சாதனையாக அமைந்தது. இத்தகைய வியக்கதக்க செயலைப் பாராட்டி மத்திய அரசு இவருக்கு 1981 ஆம் ஆண்டு இந்தியாவின் மிகப்பெரும் புகழ்பெற்ற 'பத்ம பூஷன்' விருது வழங்கி கௌரவித்தது.
1963 ஆம் ஆண்டு முதல் 1983 ஆம் ஆண்டு வரை, இந்திய விண்வெளி ஆராய்ச்சி கூடத்தில் பல பணிகளை சிறப்பாக செய்த இவர், 1999 ஆம் ஆண்டு 'பொக்ரான் அணு ஆயுத சோதனையில்' முக்கிய பங்காற்றினார். இந்தியாவை அணு ஆயுத வல்லரசாக மாற்றிய ஏ.பி.ஜே அப்துல் கலாம், இதுவரை ஐந்து ஏவுகணை திட்டங்களில் பணிபுரிந்துள்ள இவர், இந்திய ராணுவ ராக்கெட் படைப்பின் பிதாவாக போற்றப்படுகிறார்.
2002 ஆம் ஆண்டு நடந்த குடியரசுத் தலைவர் தேர்தலில் வெற்றி பெற்று, இந்தியாவின் 11 ஆவது குடியரசுத் தலைவராக 2002 ஜூலை 25 ஆம் திகதியன்று பதவியேற்றார்.
குடியரசு தலைவராவதற்கு முன், இந்தியாவின் மிகப்பெரிய விருதான 'பாரத ரத்னா விருது' மத்திய அரசு இவருக்கு வழங்கி கௌரவித்தது.
2007 ஆம் ஆண்டு வரை குடியரசுத் தலைவராக இருந்த இவர் 'மக்களின் ஜனாதிபதி' என அனைவராலும் அன்புடன் அழைக்கப்பட்டார்.
அப்துல் கலாம், ஜூலை 27, 2015 ஷில்லாங்கிலுள்ள இந்திய முகாமைத்துவ கற்கை நிலையத்தில் உரையாடிக்கொண்டிருந்த வேளையில் மேடையில் பேசிக்கொண்டிருந்தபோதே மயங்கி விழுந்து மரணமானார்.