![](https://archives1.vaaramanjari.lk/sites/default/files/styles/large/public/news/2022/02/14/poli00.jpg?itok=54VGTlnb)
ஒன்றிணைய முடியாத தமிழர் தரப்பு
30 ஆண்டுகளுக்குள் இலங்கையில் மகிழ்ச்சிக்குரிய எந்தப் பெரிய மாற்றங்களும் ஏற்படப்போவதில்லை. தமிழரின் அரசியலில் 40 ஆண்டுகளுக்குள் எந்த நம்பிக்கையளிக்கக் கூடிய முன்னேற்றங்களும் நிகழ்வதற்கு வாய்ப்பில்லை.
இதொன்றும் ஆருடமல்ல. அவதானத்தின்பாற்பட்ட கணிப்பு. அனுப அறிவின் வெளிப்பாடு. இதை மறுத்துரைப்போர் தங்களுடைய தருக்க நியாயங்களை முன்வைக்க வேண்டும்.
என்னுடைய அவதானத்தின் வரைபடத்தை இங்கே முன்வைக்கிறேன்.
தற்போதிருக்கும் அரசியற் கட்சிகளும் சரி, அரசியற் தலைவர்களும் சரி இலங்கையில் நல்ல – முன்னேற்றகரமான - மாற்றங்களை உருவாக்கக் கூடிய அடிப்படைப் பண்புகளைக் கொண்டிருக்கவில்லை. மாற்றத்துக்கான அரசியல், அதை முன்னெடுக்கக் கூடிய துணிச்சல், அதற்கான அர்ப்பணிப்பு, பிறரையும் பிறவற்றையும் அரவணைத்துச் செல்லக் கூடிய திறன், அதற்கான சிந்தனை, இணைந்து செயற்படக்கூடிய மன விரிவு, ஜனநாயகத்தின் மீதான பிடிமானம் என எவையுமே எந்தத் தரப்பிடமும் இல்லை.
குறைந்த பட்சம் கடந்த காலத்தைப் பற்றிய மதிப்பீட்டையோ படிப்பினைகளையோ கூட இந்தத் தரப்புகள் செய்யத் தயாரில்லை. அதைப்போல இன்றுள்ள நிலைமையைக் கூடப் புரிந்து கொள்ள முடியாமலே, அதிலே ஆர்வமின்றியே உள்ளன. பதிலாக வழமையான பசப்பு வார்த்தைகளை – ஏமாற்றுக்களை அள்ளி இறைப்பதிலேயே கவனம் கொண்டிருக்கின்றன.
நாடு இன்று மிகமிக நெருக்கடியான அரசியற் பொறிக்குள்ளும் பொருளாதார நெருக்கடிக்குள்ளும் சிக்குண்டுள்ளது. இதற்குத் தனியே தற்போது அதிகாரத்தில் உள்ள அரசாங்கத்தை மட்டும் குற்றம் சாட்ட முடியாது. தொடர்ச்சியாக அதிகாரத்தில் இருந்த அரசாங்கங்கள் – ஆட்சித்தரப்புகள் - ஒவ்வொன்றும் விட்ட குறைபாடுகளும் செய்த தவறுகளுமே இன்று மிகப் பெரிய நெருக்கடியை உருவாக்கியுள்ளன.
ஆகவே இதை உணர்ந்துகொண்டு, இதற்கான பொறுப்பை ஏற்றுக் கொண்டு, எதிர்கால இலங்கையைக் கட்டமைப்பது எப்படி? அதற்கான அடிப்படைகள் என்ன? அதனை முன்னெடுப்பது எப்படி? மாற்ற வேண்டிய விடயங்கள் எவை? அதற்கு மக்களையும் பிற சக்திகளையும் எப்படித் தயார்ப்படுத்துவது? இதற்கான தலைமை எது? அந்தத் தலைமையின் குணாம்சமும் கடமைகளும் (பொறுப்புகளும்) எப்படியிருக்க வேண்டும்? என்று சிந்திக்கக் கூடிய நிலையிலும் எந்தத் தரப்பும் இல்லை.
உதாரணமாக இன்று நாட்டிலே நான்கு பெரிய தரப்புகள் ஆட்சி அதிகாரத்தை அமைக்கக்கூடிய நிலையில் உள்ளன. ஒன்று ஐ.தே.க. மற்றது சஜித்தின் ஐக்கிய மக்கள் சக்தி. மூன்றாவது, சு.க. நான்காவது பொதுஜனபெரமுன.
இந்த நான்கிலும் வழமையான சிந்தனைக்கு அப்பால் புதிய மாற்றுக்கள் – மாற்று முறைமைகள் உண்டா?
ஐதேகவின் மறுபதிப்பே ஐக்கிய மக்கள் சக்தி. சு.கவின் மறுபதிப்பே அல்லது பிந்திய வடிவமே பொதுஜன பெரமுன.
பிந்தியவை ஐ.தே.கவையும் சு.க வையும் கடக்கக் கூடிய ஆற்றலைக் கொண்டிருக்கவில்லை. அதிகாரப் போட்டியின் விளைவாக புதிய தோற்றத்தில் உள்ளனவே தவிர, புத்தாக்கமாக இல்லை என்பது நிரூபணம்.
இலங்கையின் தேசிய நெருக்கடிகளான இனப்பிரச்சினை, பொருளாதார நெருக்கடி, அந்நிய ஆதிக்கத்துக்கு இடமளியாதிருத்தல் என்பவற்றில் இவை ஆற்றல் குறைவையே கொண்டுள்ளன.
இதே நிலைதான் தமிழ்த்தரப்பிடத்திலும் காணப்படுகிறது. தமிழ்த்தேசியக் கூட்டமைப்புக்குப் பதிலாக விக்கினேஸ்வரன். விக்கினேஸ்வரனுக்குப் பதிலாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி.. என இப்படியே ஒன்றின் மறுபதிப்பாக மற்றது என்ற வகையில் ஒவ்வொன்றும் உள்ளன.
இதைக் கடந்து சிந்திக்கக் கூடிய நிலையில் எந்தக் கட்சியும் இல்லை.
இதைப்போலவே இன்றுள்ள எந்தத் தலைவர்களும் நாட்டின் எந்த நெருக்கடிக்கும் எந்தப் பிரச்சினைக்கும் தீர்வைக் காணக்கூடிய நிலையில் இல்லை.
இதற்கு அடுத்தாக வரக்கூடியவர்கள் என்று எதிர்பார்க்கக் கூடியவர்களும் போதாமைகளோடுதான் உள்ளனர்.
இப்போதிருக்கும் அரசியலின் - சிந்தனையின் தொடர்ச்சியாக இருக்கிறார்களே தவிர, புதிய போக்கொன்றை உருவாக்கக் கூடியவர்களாக இல்லை.
விலக்காக இருந்திருக்க வேண்டிய ஜே.வி.பி தனக்குள் உட்சுருண்டு கொண்டிருக்கிறது. அது விரிந்து ஒரு தேசிய சக்தியாக மாறியிருக்க வேண்டும். அதற்கான பக்குவத்தையும் ஆற்றலையும் அது இழந்து விட்டது.
ஆகவே சுதந்திரத்துக்குப் பிந்திய இலங்கை, வரவர பிற சக்திகளின் பிடிக்குள் சிக்கிக் கொண்டிருக்கிறது என்ற எளிய உண்மையைக் கூட – ஆபத்தான யதார்த்தத்தைக் கூட புரிந்து கொள்ளக் கூடிய நிலையில் எவையும் இல்லை.
1948 க்கு முன் ஐந்து நூற்றாண்டுகளாக அந்நியரின் ஆதிக்கத்துக்குள் நேரடியாக அடிமைப்பட்டுக் கிடந்த தேசம் இது. 1948க்குப் பின் இன ஒடுக்குமுறை, இன முரண்பாடு போன்றவற்றினால் பொருளாதார ரீதியிலும் அரசியல் ராஜதந்திர அழுத்தங்களினாலும் இலங்கை பிற சக்திகளின் ஆதிக்கத்துக்குட்பட்டுள்ளது.
இன்று வெளிப்படையாகவே இந்தியாவும் சீனாவும் இலங்கையை ஆக்கிரமிப்பதற்கான பொறிகளை முன்னிறுத்திச் செயற்படுகின்றன. எமக்கான கடலில் மீனைக் கூடப் பிடிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இதை எப்படித் தடுப்பது என்பதில் திறனுள்ள எந்தப் பொறிமுறையும் எவரிடத்திலும் இல்லை்.
உள்ளே ஒருபோதும் இணங்கிக் கொள்ள மாட்டோம். பதிலாக உலகச் சக்திகளிடம் அடிமைப்பட்டுக் கொள்வோம் என்பதே இலங்கையர்களின் கொள்கை.
இதையே வெளிச்சக்திகள் தமக்கு வாய்ப்பாக்கிக் கொள்கின்றன.
முக்கியமாக பல நூற்றுக்கணக்கான ஆண்டுகளாக இலங்கை ஒரு பல்லின மக்கள் வாழ்கின்ற நாடு என்ற புரிதலே பல தரப்புகளிடமும் இல்லை. அதிலும் முதல்நிலை அரசியற் சக்திகளாக உள்ள எந்தத் தரப்பிடத்திலும் இந்தப் புரிதல் இல்லை. இருப்பதெல்லாம் இனவாதம் மட்டுமே. அதிலிருந்தே ஒவ்வொரு தரப்பும் தம்மைக் கட்டமைத்துள்ளன. அதிலிருந்தே தமக்கான தருக்க நியாயங்களை உருவாக்கிக் கொள்கின்றன.
இப்படியான சூழலில் எப்படி மாற்றங்கள், நல் விளைவுகள் உருவாகும்?
ஆனால், இதை மறைத்துக் கொண்டே செயற்பட முனைகின்றன ஒவ்வொரு தரப்பும்.
இப்பொழுது சம்பிக்க ரணவக்க புதியதொரு சக்தியாக முன்னெழுவதற்கு முயற்சிக்கிறார்.
இதைப்போலவே சஜித் பிரேமதாசவும் நாடு முழுவதிலும் சுற்றுப்பயணங்களை மேற்கொண்டு வருகிறார்.
இருவரிடத்திலும் ஒரு புதிய சேதியைக் காண முடியவில்லை. ஆனால் நாட்டில் உருவாகியிருக்கும் பொருளாதார நெருக்கடியை தமக்கு வாய்ப்பாகப் பயன்படுத்திக் கொள்ள விளைகிறார்கள். இதொன்றும் புதியதல்ல.
கடந்த காலத்திலும் இதைப்போல நெருக்கடிகளின்போது அதிகாரத்திலிருக்கும் அரசுக்கு எதிராக மாற்றத்தைக் கொண்டு வரப்போகிறோம் என்ற குரலோடு பல சக்திகள் எழுந்து வந்திருக்கின்றன.
அண்மைய உதாரணம், கடந்த நல்லாட்சிக்கான அரசாங்கமாகும்.
இனப்பிரச்சினைக்கான தீர்வு, புதிய அரசியலமைப்பு, நல்லிணைக்கம், பகை மறப்பு, பொறுப்புக் கூறல், புதிய அபிவிருத்திப் பாதை என்று பல அழகிய பிரகடனங்களோடு அதிகாரத்துக்கு வந்தது.
இதற்குச் சர்வதேச ஆதரவு என்ற வகையில் இந்தியா – மேற்குலக ஆதரவும் இருந்துது.
ஆனால், இறுதியில் என்ன நடந்தது?
நான்கு ஆண்டுகாலமாக நடந்த காலம் கடத்தல், இழுத்தடிப்பு என்பதற்கு அப்பால் எதுவுமே நிகழவில்லை.
அப்படியான ஒரு தோற்றப்பாட்டை உருவாக்கவே – மாற்றத்தின் நாயகர்களாக உருவாகி விடலாம் என்றே சம்பிக்கவும் சஜித்தும் முயற்சிக்கிறார்கள்.
இதெல்லாம் எதைத் தான் தரப்போகின்றன? இவ்வாறே தமிழ் அரசியலும் நாறிப்போய்க் கிடக்கிறது.
13 ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்துவதில் கூட ஒன்றிணைய முடியாமல் உள்ளன.
இந்தச் சீரில் 13 க்கு மேலே சென்று சமஷ்டி, தனிநாடு என்ற கனவுகள் வேறு. இதையிட்டுச் சிரிப்பதா? அழுவதா?
கருணாகரன்