மும்பை இந்தியன்ஸ் அணிக்கு ஏமாற்றமளித்த வீரர்கள் | தினகரன் வாரமஞ்சரி

மும்பை இந்தியன்ஸ் அணிக்கு ஏமாற்றமளித்த வீரர்கள்

கிரிக்கெட் உலகில் பிரபல்யமான ரி20லீக் தொடர்களில் ஒன்றான இந்தியன் பிரிமியர் லீக் தொடரானது கடந்த 2008ஆம் ஆண்டிலிருந்து மிக பிரமாண்டமாக நடாத்தப்பட்டு வருகிறது. இதுவரையில் 12தொடர்கள் நிறைவடைந்துள்ள நிலையில், இந்த வருடத்திற்கான தொடர் செப்டம்பர் 19ஆம் திகதி ஐக்கிய அரபு இராச்சியத்தில் ஆரம்பமாகவுள்ளது.

ஒவ்வொரு வருடமும் ஐ.பி.எல் தொடர் ஆரம்பமாவதற்கு முன்னர் தொடருக்கான ஏலம் நடாத்தப்படுவது வழக்கம். ஏலத்தின் போது தங்களது அணிக்கு தேவையான வீரர்களை ஏலத்தில் எடுக்க அனைத்து அணிகளும் கடுமையாக போட்டி போடும். அவ்வாறு ஒவ்வொரு அணியும் போட்டி போட்டு பல கோடிகளை கொட்டி ஏலத்தில் எடுக்கும் சில வீரர்களை தவிர பெரும்பாலான வீரர்கள் தன்னை நம்பி எடுத்த அணிக்கு ஏமாற்றத்தை மட்டுமே கொடுத்து வருகின்றனர்.

அந்த வகையில், தற்போதைய நடப்பு சம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணியால் ஏலத்தில் அதிக விலை கொடுத்து வாங்கப்பட்டு அந்த அணிக்கு ஏமாற்றத்தை மட்டுமே கொடுத்த ஐந்து முக்கிய வீரர்கள் தொடர்பில் கவனம் செலுத்தலாம்.

ரிக்கி பொண்டிங்

(அவுஸ்திரேலியா)

கிரிக்கெட் உலகின் முன்னாள் ஜாம்பவான்களில் ஒருவரான ரிக்கி பொண்டிங்கை மும்பை இந்தியன்ஸ் அணி கடந்த 2013ஆம் ஆண்டு ஏலத்தில் எடுத்தது. அந்த தொடரில் மொத்தம் 4போட்டிகளில் மட்டுமே விளையாடிய ரிக்கி பொண்டிங் வெறும் 39ஓட்டங்களை மாத்திரம் பெற்று, தன்னை நம்பிய மும்பை இந்தியன்ஸ் அணிக்கு மிகப்பெரும் ஏமாற்றத்தை மட்டுமே பரிசாக கொடுத்தார். மேலும் ரிக்கி பொண்டிங் விளையாடிய இறுதி ஐ.பி.எல் தொடரும் இதுவே.

ஷிகர் தவான் (இந்தியா)

இந்திய அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரராக திகழும் ஷிகர் தவானை கடந்த 2009ஆம் ஆண்டு மும்பை இந்தியன்ஸ் அணி ஏலத்தில் எடுத்தது. 2009மற்றும் 2010ஆண்டுகளில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக ஷிகர் தவான் ஒரு போட்டியில் கூட சொல்லிக்கொள்ளும் அளவிற்கு விளையாடாமல் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு மிகப்பெரும் ஏமாற்றத்தை கொடுத்தார்.

யுவராஜ் சிங் (இந்தியா)

கடந்த 2019ஆம் ஆண்டுக்கான ஐ.பி.எல் தொடரின் ஏலத்தில் யுவராஜ் சிங்கை எந்த அணியும் விலை கொடுத்து ஏலத்தில் வாங்க முன்வரவில்லை. இறுதி நேரத்தில் யுவராஜ் சிங்கை அவரது அடிப்படை விலையான ஒரு கோடி ரூபாய் கொடுத்து மும்பை இந்தியன்ஸ் அணி விலைக்கு வாங்கியது. 2019ஆம் ஆண்டுக்கான தொடரில் மொத்தம் 4போட்டிகளில் மட்டுமே யுவராஜ் சிங்கிற்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. ஆனால் யுவராஜ் சிங் பெரிதளவில் பிரகாசிக்கவில்லை.

க்ளேன் மெக்ஸ்வெல் (அவுஸ்திரேலியா)

கிரிக்கெட் உலகில் அதிரடி ஆட்டத்திற்கு பெயர் போனவரான அவுஸ்திரேலிய அணியின் க்ளேன் மெக்ஸ்வெல் மீது அதீத நம்பிக்கை வைத்த மும்பை இந்தியன்ஸ் அணி கடந்த 2013ஆம் ஆண்டுக்கான தொடரில் தங்களது அணியில் இணைத்து கொண்டது. அந்த தொடரின் மூன்று போட்டிகளில் விளையாடிய க்ளேன் மெக்ஸ்வெல்; வெறும் 36ஓட்டங்களை மாத்திரம் பெற்று அணிக்கு ஏமாற்றத்தை கொடுத்தார்.

டுவைன் பிராவோ (மேற்கிந்திய தீவுகள்)

சென்னை சுப்பர் கிங்ஸ் அணியின் நம்பிக்கை சகலதுறை வீரராக திகழ்ந்துவரும் மேற்கிந்திய தீவுகளின் டுவைன் பிராவோவை ஐ.பி.எல் தொடருக்கு அறிமுகம் செய்தது மும்பை இந்தியன்ஸ் அணிதான்.

2008, 2009 மற்றும் 2010ஆம் ஆண்டுக்கான தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடிய பிராவோ, மொத்தம் தான் விளையாடிய 30 போட்டிகளில் 26 விக்கெட்டுகள் மட்டுமே வீழ்த்தினார். அதேபோன்று மூன்று தொடரிலும் சேர்த்து 457 ஓட்டங்களை மட்டுமே பெற்றிருந்தார்.

Comments