அமைச்சர் ஹாபிஸின் அதிரடி நடவடிக்கை; மணல் மாபியா அலுவலகம் முற்றுகை போலி ஆவணங்களுடன் சிலர் கைது | தினகரன் வாரமஞ்சரி

அமைச்சர் ஹாபிஸின் அதிரடி நடவடிக்கை; மணல் மாபியா அலுவலகம் முற்றுகை போலி ஆவணங்களுடன் சிலர் கைது

குருநாகல் போக்கரல்லயில் கடந்த ஐந்து வருடங்களாக செயற்பட்டு வந்த சட்டவிரோத மணல் மாபியாக்களின் அலுவலகமொன்று (24) முற்றுகையிடப்பட்டுள்ளது.

சுற்றாடல் அமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட்டின் அதிரடி நடவடிக்கையையடுத்தே இந்த அலுவலகம் சுற்றிவளைக்கப்பட்டு தேடுதல்கள் நடத்தப்பட்டுள்ளன. அமைச்சின் அதிகாரிகள் மற்றும் புவியியல் சேவை மற்றும் நில அகழ்வுப் பணியக புலனாய்வு அதிகாரிகள் ஆகியோருக்கு அமைச்சர் விடுத்த பணிப்புரைக்கமைய இரண்டு கிழமைக்குள் இந்த அதிரடி சுற்றிவளைப்பு இடம்பெற்றது.

புவியியல் சேவை மற்றும் நில அகழ்வுப் பணியகத்தின் அரச இலட்சினையை போலியாகப் பயன்படுத்தி, மணல் வியாபாரம் மற்றும் நில அகழ்வுக்கு அனுமதி வழங்கிய இடமாக இந்த அலுவலகம் இயங்கி வந்துள்ளது.

இதனோடு தொடர்புடைய சிலரும் இதன்போது கைது செய்யப்பட்டனர். இங்கிருந்த இரண்டு டிப்பர்களையும் பொலிஸார் கைப்பற்றினர். இவை, சட்டவிரோதமாக மணல் ஏற்றிச் சென்றவையென நம்பப்படுகிறது.

அமைச்சின் புலனாய்வுப்பிரிவினர் நடத்திய சுற்றிவளைப்பில் இந்த இடம் கண்டு பிடிக்கப்பட்டதுடன் இந்த அலுவலகத்திலிருந்து 500அனுமதிப்பத்திரங்கள் (லைசன்ஸ்) நாளொன்றுக்கு

வழங்கப்பட்டுள்ளதாகவும் அரசாங்கத்தால் 2,000ரூபா அறவிடப்படும் ஒரு லைசன்ஸுக்கு இவர்கள் தலா 6,000ரூபா வீதம் அறவிட்டுள்ளதாகவும் கண்டறியப்பட்டுள்ளது. இவ்வாறு சட்டவிரோதமாக நாளொன்றுக்கு 30,00,000இலட்சம் ரூபா அறவிடப்பட்டுள்ளதாகவும் இச் சட்டவிரோத செயற்பாடுகளை இயக்கி வந்த இவர்களது அலுவலகம் குருநாகல் போக்கரல்ல என்ற இடத்தில் கண்டு பிடிக்கப்பட்டதாகவும் அமைச்சர் ஹாபிஸ் நஸீர் தெரிவித்தார்.

பொலன்னறுவை வெலிக்கந்தயில் சட்ட விரோதமாக மணல் ஏற்றிச் சென்ற டிப்பர்கள் முதலில் கைப்பற்றப்பட்டதாகவும் கைதானவர்களிடமிருந்து பெறப்பட்ட தகவலைத் தொடர்ந்து இதன் பின்னணியிலுள்ளோரை கைது செய்வது மற்றும் இதுபோன்ற வேறு இடங்கள் எங்காவது இயங்குகின்றனவா என்பன தகவல்கள் பெறப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

மேலும்,சுற்றாடல் அமைச்சின் புலனாய்வுப் பிரிவு இதுபோன்ற சுற்றிவளைப்புக்களை நாடு முழுவதும் நடத்த உள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

Comments