குழந்தைகள் உட்பட எட்டு இலங்கை தமிழர்கள் தனுஷ்கோடியில் தஞ்சம் | தினகரன் வாரமஞ்சரி

குழந்தைகள் உட்பட எட்டு இலங்கை தமிழர்கள் தனுஷ்கோடியில் தஞ்சம்

தமிழக கரையோர பொலிஸாரினால் மீட்பு
தமிழகம் சென்றோர் எண்ணிக்கை 157ஆக உயர்வு

இலங்கையிலிருந்து படகு மூலம் அகதிகளாக தனுஷ்கோடிக்கு அடுத்துள்ள 01ஆம் மணல் திட்டில் குழந்தைகளுடன் தஞ்சமடைந்த இலங்கை தமிழர் 08பேரை இந்திய கடலோர  பொலிசார் மீட்டுள்ளனர்.   அவர்களை அரிச்சல்முனை கடற்கரைக்கு அழைத்து வந்து விசாரணைக்கு பின் மண்டபம் அகதிகள் முகாமில் தங்க வைத்துள்ளதாக தமிழ் நாடு செய்திகள் தெரிவிக்கின்றன.

இலங்கையில் ஏற்பட்டுள்ள கடும் பொருளாதார வீழ்ச்சி காரணமாக இலங்கை தமிழர்கள் தனுஷ்கோடி கடல் வழியாக தமிழகத்துக்குள் அகதிகளாக வந்த வண்ணம் உள்ளனர்.

தனுஷ்கோடி அடுத்துள்ள ஒன்றாம் மணல் திட்டில் குழந்தைகளுடன் இலங்கை தமிழர்கள் தவித்து வருவதாக மீனவர்கள் அளித்த தகவலின் அடிப்படையில் நேற்று சனிக்கிழமை(27) காலை கரையோர பொலிசார் விரைந்து சென்று தஞ்சமடைந்திருந்த இலங்கை தமிழர்களை பத்திரமாக மீட்டு மண்டபம் அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.

விசாரணையில் யாழ்ப்பாணம் மாவட்டத்தை சேர்ந்த ஜெயந்தி மற்றும் அவரது மூன்று குழந்தைகள்,தலைமன்னாரை சேர்ந்த சசிகுமார் மற்றும் அவரது இரண்டு குழந்தைகள் மற்றும் மன்னாரை சேர்ந்த 65வயது மூதாட்டி இந்துமதி என மொத்தமாக 08பேர் நேற்றுமுன்தினம் இரவு (26) கண்ணாடி இழை படகில் புறப்பட்டு நேற்று (27) அதிகாலை சுமார் 02மணியளவில் தனுஷ்கோடி வந்திறங்கியது தெரியவந்தது. சுமார் 04இலட்சம் ரூபாய் கொடுத்து படகில் தமிழகத்துக்கு அகதிகளாக வந்து தமிழக முகாம்களில் தங்கியுள்ள தங்களது உறவினர்களுடன் சேர்ந்து வாழலாமென தனுஷ்கோடி வந்ததாகவும்.

தங்களை அழைத்து வந்த படகு தனுஸ்கோடி முதல் திட்டில் இறக்கிவிட்டு சென்றதாகவும், அதிகாலை முதல் உணவின்றி கடும் சூறைக்காற்றுக்கு மத்தியில் உயிரை பாதுகாத்து கொண்டு தாங்கள் அணிந்திருந்த ஆடைகளை காட்டி அருகில் மீன் பிடித்து கொண்டிருந்த மீனவர்களிடம் காப்பாற்றுமாறு உதவி கோரியதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

கடந்த மார்ச் மாதம் 22ஆம் திகதி முதல் நேற்று வரை இலங்கையிலிருந்து 157இலங்கை தமிழர் அகதிகளாக தமிழகம் வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

திருச்சி ஷாஹுல் ஹமீட்,யாழ்.விசேட,  மன்னார் குறூப் நிருபர்கள்

 

 

 

Comments