வலி வடக்கு காணிகள் விடுவிப்புடன் 2,800 குடும்பங்களின் மீள் குடியேற்றம் | தினகரன் வாரமஞ்சரி

வலி வடக்கு காணிகள் விடுவிப்புடன் 2,800 குடும்பங்களின் மீள் குடியேற்றம்

யாழ்ப்பாணத்தில் இராணுவம் வசமுள்ள பொதுமக்களின் காணிகளை விடுவிப்பது தொடர்பாகவும் சுமார் 2,800குடும்பங்களின் மீள் குடியேற்றம் தொடர்பாகவும் ஜனவரி மாதத்துக்கு முன்னர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை சந்திக்க தான் தீர்மானித்துள்ளதாக யாழ்.வலிகாமம் வடக்கு மீள்குடியேற்றம் மற்றும் புனர்வாழ்வுச் சங்கத் தலைவர் அருணாசலம் குணபாலசிங்கம் நேற்றுத் தெரிவித்தார்.

இதற்கான முன்னாயத்தங்கள் செய்யப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.   யாழ்ப்பாணத்தின் வலிகாமம்- வடக்கில் மயிலிட்டி மற்றும் பலாலியிலுள்ள காணிகள் கடந்த 30ஆண்டுகளுக்கும் மேலாக இராணுவத்தின் வசமுள்ளன. மயிலிட்டி துறைமுகத்தை கடற்றொழில் மக்களின் வாழ்வாதாரத்துக்கு பயன்படுத்த முடியும்.   பலாலி பிரதேசத்தை விவசாயத்தில் ஈடுபடும் குடும்பங்கள் பயன்படுத்த முடியும்.    எனினும் அந்த காணிகளை மீள்குடியேற்றத்துக்கு விடுவித்தால் மட்டுமே இது சாத்தியமாகும் என்றும் சங்கத் தலைவர் அருணாசலம் குணபாலசிங்கம் தெரிவித்தார்.   வலிகாமம்- வடக்கு மீள்குடியேற்றக் குழுவின் கூற்றுப்படி, 1990இல் இலங்கை இராணுவத்தினரால் சுமார் 6,500ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டுள்ளது.  

 3,500ஏக்கர் காணிகள் உரியவர்களிடம் விடுவிக்கப்பட்டதாக கூறப்பட்டாலும் காங்கேசன்துறை, கீரிமலை, வறுத்தலவிளான் மற்றும் கட்டுவன் ஆகிய பகுதிகளில் சுமார் 500ஏக்கர் காணிகள் இன்னமும் இராணுவத்தின் கட்டுப்பாட்டிலேயே இருப்பதாக குணபாலசிங்கம் தெரிவித்தார். மீதமுள்ள 3,000ஏக்கர் நிலம் முழுமையாக ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது.  

இந்த நிலையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை நேரில் சந்தித்து தமது குறைகளை விளக்குவதற்கு சந்தர்ப்பம் வழங்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளதாக குணபாலசிங்கம் தெரிவித்தார். 

Comments